2025 ஜூன் 21, சனிக்கிழமை

போராளிகள் கண்காணிக்கப்படுவதற்கு புலம்பெயர் தமிழர்களே பொறுப்பு: ஈ.பி.டி.பி

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் கண்காணிக்கப்படுவதற்கு வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களே காரணம் என்று ஈ.பி.டி.பி கட்சியின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் சிவன் சிவகுமார் தெரிவித்தார்.

வட மாகாணசபையை அரச தரப்பினர் கைப்பற்றினால் சிங்கள குடியேற்றங்கள் தள்ளி வைக்கப்படும் என்பதுடன் பொலிஸ் காணி அதிகாரங்களையும் எடுத்துக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வட மகாணசபை தோதல் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தை ஆதரித்து நிற்கும் கட்சிகளை மக்கள் ஆதரித்தால் மக்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் சந்தர்ப்பம் உள்ளது.

ஏனெனில் வன்னியில் தான் யுத்தத்தின் கடைசி கொடூரமான சம்பவங்கள் இடம்பெற்று வன்னிப்பரதேசம் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.
 இதனை கட்டியெழுப்பவும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் வேண்டுமாயிருந்தால் அரசாங்கத்துடன் இணைந்த கட்சிகளாலேயே அது சாத்தியமாகும். வேறு யாராலும் அது முடியாத காரியம் என்றே நாம் நம்புகின்றோம்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கைகளில் மாகாணசபை செல்லுமாக இருந்தால் தற்போது அவர்களது ஆளுகைக்குட்பட்ட பிரதேசசபை, நகரசைபகள் போன்றே எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லாது மாகாணசபையும் காணப்படும். இவ் மாகாணசபை ஈ.பி.டி.பி யின் கையில் கிடைக்குமாயின் மக்களுக்கான நல்லதொரு எதிர்காலம் அமையும் என்பது உண்மையான நிலையாகும்.

மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வாழ்ந்து ஒன்றுமேயில்லாது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் அரசாங்கத்தால் எத்தகைய அபிவிருத்திகளை செய்தாலும் அது போதுமானதாக இல்லாது தான் இருக்கும்.

ஏனெனில் எத்தனையோ சொத்துக்களை அவர்கள் சேர்த்து வைத்துவிட்டு வந்தவர்கள் தற்போது ஏதுமல்லாதுள்ளபோது எவ்வளவு வழங்கினாலும் அது இல்லாதது போலவே இருக்கும்.

ஆனால் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் அவர்கள் தமக்கான பொருளாதாரத்தை தேடிக்கொள்ளும் நிலை ஏற்படும்.

இந் நிலையில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் கண்காணிக்கப்படுவதற்கு வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களே காணரமாக உள்ளனர். ஏனெனில் அவர்கள் அங்கு புலிக்கொடியை காட்டி திரியும் போது இங்குள்ள முன்னாள் போராளிகளும் ஆயுதத்தை தூக்குவார்களா என்ற சந்தேகம் வலுப்பெறும் வாய்புள்ளது.

அதன் காரணமாகவே புனர்வாழ்வு பெற்று வெளியேறிய போராளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இதேவேளை அரசாங்க தரப்பினர் மாகாணசபையை கைப்பற்றினால் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆட்சி அமைத்தால் அவர்கள் எது வித நடவடிக்கையும் எடுக்காது அரசில் குறை கூறிக்கொண்டு மாகாணசபை கலைக்கப்பட்டு விடும் என்ற கருத்தை பரவவிட்டுக்கொண்டு இருப்பார்கள் என தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .