
-எஸ்.கே.பிரசாத்
எமது கடற்பிரதேசத்தில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கடற்படையினருக்கு அமைச்சர் ராஜித சேனாரத்தன உத்திரவிட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர், மாதகல் பகுதிக்குச் சென்று அங்குள்ள மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்போது, குறித்த பகுதியில் இந்திய இழுவைப் படகுகள் மற்றும் சாதாரண படகுகளில் பெருமளவான இந்திய மீனவர்கள் வந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கையை கடற்படையினரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று மாதகல் கடற்தொழிலாளர்கள் - அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இது தொடர்பில் குறித்த பிரதேச கடற்படை அதிகாரியை அழைத்த அமைச்சர், எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று பணிப்புரை விடுத்தார்.
இவ்வாறு கைது செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் மட்டுமே எம்மால் கைது செய்யமுடியும் என்று கடற்படை அதிகாரி தெரிவிக்க, இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் நான் பேசிக்கொள்கிறேன், கடற்தொழில் சார்ந்த அமைச்சராக நான் இருக்கிறபடியால் இது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டிய தேவை எனக்கும் இருக்கிறது. எனவே இவ்வாறான சம்பவங்களுக்கு கடற்படையினர் அனுமதிக்காது எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்யவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
