2025 ஜூன் 21, சனிக்கிழமை

தனியார் பஸ் வண்டிச் சாரதிகள், நடத்துநர்கள் பணிப்புறக்கணிப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


வடமாகாண தனியார் போக்குவரத்துச் சேவையின் கீழ், யாழ். மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ் வண்டிச் சாரதிகளும் நடத்துநர்களும் இன்று திங்கட்கிழமை காலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இலங்கை போக்குவரத்துச் சபையின் அக்கரைப்பற்று பஸ் வண்டி நடத்துநருக்கும் தனியார் பஸ் வண்டி நடத்துநர் ஒருவருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த இவர்கள் இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க,  தனியார் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளை யாழ். மத்திய பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் நிறுத்த வேண்டாம் எனவும்; தனியார் பஸ் வண்டிகளை பண்ணை பகுதிக்கு மாற்றுமாறும் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் கோரியிருந்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த தனியார் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளும் நடத்துநர்களும் தனியார் போக்குவரத்து சேவை பஸ் தரிப்பிடத்தை மாற்ற   வேண்டாம் எனவும் பண்ணை பகுதிக்கு மாற்றினால் தங்களது போக்குவரத்துச் சேவைகள் ஸ்தம்பிதமடைந்து விடும் என்பதுடன், பயணிகள் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனவும் கூறினர்.

இந்த நிலையில்,  இந்தக் கைகலப்பைக் கண்டித்தும் இந்தக் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்தும் வடமாகாண தனியார் போக்குவரத்துச் சேவையின் கீழ், யாழ். மாவட்டத்திலுள்ள தனியார் பஸ் வண்டிச் சாரதிகளும் நடத்துநர்களும் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவுடன் தனியார் பஸ் வண்டிச் சேவை தலைவர் மற்றும் ஊழியர்கள், இலங்கை போக்குவரத்து சேவை தலைவர் ஊழியர்கள் கலந்துரையாடவுள்ளனர். இந்தக் கலந்துரையாடலின்  பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் வடமாகாண கூட்டிணைக்கப் பெற்ற தனியார் பஸ் ஒன்றிய தலைவர் கெ.கெங்காதரன் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .