2025 ஜூன் 21, சனிக்கிழமை

இராணுவ தலையீடு ஐஸ் கதை போன்றது: பசில்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்,நா.நவரத்தினராசா


எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் இராணுவ தலையீடுகள் இன்றி நியாயமானதும் நீதியுமான முறையில் மிக அமைதியான முறையில் நடைபெறுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, 'வடமாகாண சபை தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருப்பதாக' ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், 'வட மாகாணசபைத் தேர்தலில் இராணுவத்தின் தலையீடு என்பது ஐஸ் கதை போன்றது' என்று கூறி அக்கதையினையும் விளக்கினார்.

'ஒரு ஊரில் ஐஸ் மலையொன்று இருந்ததாம். அந்த மலையில் ஒருவர் தங்கியிருந்தார். ஒருமுறை, அதே கிராமத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த மலையில் ஏறினார். முலையில் தங்கிருந்தவரின் வீட்டிற்கு சென்ற கிராமத்தவர், தனது இரு கைகளையும் ஊதிக்கொண்டிருந்தார்.

அப்போது ஐஸ் மலை மீது இருந்தவர், 'ஏன் கைகளை ஊதிக்கொண்டிருக்கிறீர்கள்?' என்று கிராமத்து நபரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த கிராமத்தவர், 'குளிராக இருக்கின்றது. அதனால் ஊதிக்கொண்டு இருக்கிறேன்' என்றார்.

அதைக் கேட்ட ஐஸ் மலை மீது இருந்தவர், சூடான சூப் கொண்டு வந்து கொடுத்தார். சூப்பைக் கையில் எடுத்த கிராமத்தவர் அதையும் ஊதிக் கொண்டிருந்தார். அதை அவதானித்த ஐஸ் மலை மீது இருந்தவர், 'மீண்டும் ஏன் ஊதுகிறீர்கள்?' என கேட்டார். அதற்கு பதிலளித்த கிராமத்தவர்' சூப் சூடாக இருக்கின்றது. அதனால் ஊதுகிறேன்' என்று கூறினார்.

அதற்கு ஐஸ் மலை மீது இருந்தவர் 'இவர் பொய்க்காரர்' எனக் கூறி அவரை அடித்து விரட்டினார். இந்த கதையைப் போன்று தான் நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் இராணுவ தலையீடு இருப்பதாக கூறும் விடயமும் இருக்கிறது என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

'தென் பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இங்கு பார்க்கும் போது, இராணுவ தலையீடு அதிகமாக இருப்பது போன்று தான் தோன்றுகின்றது. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைமையினையும், தற்போது உள்ள நிலைமையினையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும்' என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வடபகுதியில் வாழும் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படவில்லை. மாறாக பல காணிகளை விடுத்துவித்துள்ளோம்' என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

'காணி சுவீகரிப்பு என்பது அரசாங்கத்தின் பல்வேறு தேவைக்காக மேற்கொள்ளப்பட்டதாக இருக்கலாம். தவிர, தேவையற்ற நோக்கத்திற்காக காணிகள் எவையும் சுவீகரிக்கப்படவில்லை. யாழில் உயர்பாதுகாப்பு வலயத்தில் விமானத்தளம் மற்றும் துறைமுக விஸ்தரிப்புக்கான காணிகளை தவிர ஏனைய காணிகள் பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கப்படும். இவ்வாறு சுவிகரிக்கப்படும் காணிகளுக்கு மாற்றீடான காணிகளோ அல்லது நட்டஈடோ வழங்கப்படும்' என்றும் அவர் தெரிவித்தார்.

'வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன. ஆனால் அங்கு சுவீகரிக்கப்படும் போது அங்குள்ள மக்கள் பார்க்கும் பார்வைக்கும் இங்குள்ள மக்கள் பார்க்கும் பார்வைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இங்கு பிரிவினைவாதம், பிரதேசவாத்தினைத் தூண்டும் வகையில் செயற்படுகின்றார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் எந்தவித காணிகளும் சுவீகரிக்கப்படவில்லை. ஆனால் எந்த ஒரு அரசாங்கமும் விடுவிக்காத பல காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த மாகாணசபை ஆட்சி அதிகாரத்தை உங்களிடம் தருவதற்கு தயாராக இருக்கின்றார். இந்நிலையில் இந்த ஆட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் போனால் என்ன நடக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

வடமாகாண மக்களுக்கான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய பல்வேறு விடயங்கள் தொடர்பாக மஹிந்த சிந்தனையூடாக தெளிவாக கூறியுள்ளார். இதனிடையே உயர்பாதுகாப்பு வலயப் பகுதியிலுள்ள பொதுமக்களின் காணிகளில் பலாலி விமானத்தள விஸ்தரிப்பு மற்றும் துறைமுக விஸ்தரிப்புக்கான காணிகளை தவிர ஏனைய பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை மக்களிடம் நிச்சயம் நாம் கையளிப்போம்.

அத்துடன் விஸ்தரிப்பின் போது பெறப்படும் காணிகளுக்கேற்ற பெறுமதியை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுமெனவும் வடமாகாணத்திலுள்ள காணிகளை அரசு பறிக்கின்றது என்று சிலர் கூறிவரும் நிலையில் இக்காணிகள் வடமாகாணத்தில் இந்திய அமைதிப்படையிருந்த போது எடுத்த காணிகள் என்பதுடன் நாம் அவற்றை படிப்படியாக மக்களிடம் மீண்டும் கையளித்து வருகின்றோம்.

தேர்தல் காலத்தில் எமது தரப்பு வேட்பாளர்கள் அதிகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றார்கள். இராணுவத்தினர் தேர்தலில் தலையிடுகின்றார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று' என்று அமைச்சர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0

  • vALLARASU. Tuesday, 10 September 2013 04:15 PM

    ஐயா... ந‌ல்ல கதை, அப்படியே பாட்டி வட சுட்ட கதையையும் சொல்லுங்களேன்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .