2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஆளுநரின் உரையை புறக்கணிப்பேன்: சிவாஜிலிங்கம்

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். ஜெகநாதன், சுமித்தி தங்கராசா

வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் கன்னியுயைர புறக்கணிக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை (11) இடம்பெறவுள்ளது. இவ் இரண்டாவது அமர்வில்  வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உரை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே வடமாகாண
ஆளுநரின் உரையை புறக்கணிக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சிவாஜிலிங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

'இலங்கையில் யுத்தத்தின்போது அப்பாவித் தமிழ்மக்கள் சுமார் 70 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாகவும் காயமடைந்தும் விதவைகளாகவும் அநாதைகளாகவும் ஆக்கப்பட்டனர்.

அத்துடன் அவர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றன.

யுத்தம் முடிந்து நான்கரை ஆண்டுகள் கடந்தபோதும் பாதிப்புக்களுக்கு உள்ளனாவர்களுக்கான மறுவாழ்வு, நிவாரணம் வழங்கப்பட்டவில்லையென்பதுடன் உள்ளூர் விசாரணைகளும் நடைபெறவில்லை.

இந்த சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் தலைவி திருமதி நவநீதம்பிள்ளை, இலங்கை அரசு உரிய விசாரணைகளை நடத்தத் தவறும் பட்சத்தில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் நடத்த வேண்டிவரும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். எனினும் இலங்கை அரசு தனது போக்கை மாற்றவில்லை.

ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் சிறைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். அத்துடன், சரணடைந்து காணாமற்போன ஆயிரக்கணக்கானவர்கள் என்ன ஆனார்கள் என்று இன்னமும் தெரியவரவில்லை.

தமிழின படுகொலையானது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னரும் இலங்கை அரசு பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை நடத்துவதில் விடாப்பிடியாகவுள்ளன. 

பொதுநலவாய மாநாட்டிற்கோ அல்லது அங்கத்துவ நாடுகளின் தலைவர்களுக்கோ நாங்கள் எதிரானவர்கள் இல்லை.

தமிழின அழிப்பைச் செய்து வரும் இலங்கை அரசாங்கம் நடத்தும் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்பது இலங்கை தமிழர்களின் வேண்டுகோளாகும்.

தமிழின படுகொலையினை அத்தாட்சிப்படுத்தும் வகையில் பல காட்சிகள் வெளிவந்துள்ளன.  தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்பதற்கு ஆதாரமாக உயிருடன் அவர் பிடித்து வைக்கப்பட்டிருந்த காணொளியை சனல் - 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கும் வழமைபோல இலங்கை அரசாங்கம் அலட்சியமாக நடந்து கொண்டது.

தம்புள்ளயில் அமைந்திருந்த காளி கோவிலானது தரைமட்டமாக்கப்பட்டு தமிழ் மக்களின் ஒரு பகுதியினராகிய இந்துக்களின் மதச் சுதந்திரம் கேள்விக்குறியாக்கப்பட்டது. வாகரை, முறிகண்டி, வலி.வடக்கு ஆகிய தமிழ்த் தாயக இடங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் முப்படையினரின் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டு தமிழர்களின் நிலங்கள் சுவீகரிப்புச் செய்யப்பட்டு வருகின்றன.

வலிகாமம் வடக்கிலிருந்து 23 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களின் 6 ஆயிரத்து 300 ஏக்கர்; காணிகள், கிழக்கு சம்பூரில் 10 ஆயிரம் ஏக்கர் காணிகள் சுவீகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன் தமிழர் தாயகத்தில் காணிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கம் மறந்துள்ளது.
இவ்வாறான காரணங்களைக் கண்டித்து வடமாகாண ஆளுநர் வடமாகாண சபையில் நிகழ்த்தவுள்ள உரையினை புறக்கணிக்கவுள்ளேன்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .