2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கோபிதாஸ் மரணத்துக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 மார்ச் 01 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

மகஸீன் சிறைச்சாலையில் மரணமான விஷ்வலிங்கம் கோபிதாஸின் உயிரிழப்பிற்கு நீதிகோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நாளை (02) புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலை அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அனுப்பப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'கோபிதாசின் மரணத்திற்கு நீதியான சாவதேச விசாரணை கோரும் ஐனநாயக ரீதியான  போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம். விஸ்வலிங்கம் கோபிதாஸ் 2007ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் கடுமையான உடல் உள சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மகஸீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது கடந்த 24ஆம் திகதி மர்மமான முறையில் அவர் இறந்துள்ளார்.

இவரது மர்ம மரணத்திற்கு நீதியான சர்வதேச விசாரணை கோரியும், அரசியல் கைதிகள், மீதான சித்திரவதைகள் துன்புறுத்தல்களை தடுத்து நிறுத்தக் கோரியும், அனைத்து அரசியல் கைதிகளும்; விடுவிக்கப்படல் வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை (02) காலை 9 மணி முதல் 10.00மணி வரை வடமராட்சி புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் மீதுதொடரும் படுகொலைகள், துன்புறுத்தல்கள், சித்திரவதைகள், மருத்துவ வசதிகள் மறுக்கப்படல் உள்ளிட்ட அடக்கு முறைகளை சர்வதேச சமூகத்திற்கு அம்பலப்படுத்தவும் இவற்றை தடுத்து நிறுத்தவும், கைதிகளது விடுதலையை உறுதிப்படுத்தவும் சர்வதேச சமூகம் உரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென வலியுறுத்தியும், நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் வேறுபாடுகளை மறந்து கலந்துகொண்டு இப்போராட்டம் வெற்றிபெற உதவுமாறு அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .