2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வளலாய் அமெரிக்க மிஷன் பாடசாலையை மீள இயக்க நடவடிக்கை: குருகுலராஜா

Menaka Mookandi   / 2014 மார்ச் 14 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இதுவரை காலமும் இயங்காமல் இருக்கும் வலி.வடக்குப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் வளலாய் அமெரிக்க மிஷன் பாடசாலையினை மீளவும் இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா உறுதியளித்தார்.

வலி.வடக்கு மக்கள் 1990ஆம் ஆண்டு யுத்தத்தினால் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர். அதனால் இயங்காமல் இருந்த இப்பாடசாலை தற்போது  பாதிப்படைந்து உள்ளதாகவும், அதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பாடசாலை கட்டிடத்தை கட்டித்தருமாறு வளலாய் கிராமிய சங்கம் வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவிடம் கோரிக்கையொன்றை விடுத்திருந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் கூட்டமொன்று நேற்று (13) வளலாய்ப் பகுதியில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர் அங்கு கருத்துக் கூறுகையில்,

மேற்படி பாடசாலையினை 2ஆம் தவணைக்கு முன்னராக தனியார் வீடொன்றில் ஆரம்பியுங்கள். வடமாகாண சபையில் தற்போது போதியளவு நிதியில்லை. அடுத்தவருடத் தொடக்கத்திற்கு முன்னர் இப்பாடசாலைக்கு கட்டிடம் அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளிக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி பாடசாலை 1882ஆம் ஆண்டு அமெரிக்க மிஷனரிமார்களால் தரம் 4 வகுப்பு தொடக்கம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரையான வகுப்புக்கள் கொண்டதாக ஸ்தாபிக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு வலி.வடக்குப் பிரதேசம் இராணுவத்தினருடைய உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டது.

இருந்தும் 2011ஆம் ஆண்டு இப்பிரதேசம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது. அச்சமயம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராகவிருந்த இமெல்டா சுகுமார் இப்பிரதேசங்களில் மீண்டும் மக்களை மீளக்குடியமர்த்தியிருந்தார்.

இருந்தும், கட்டிடங்கள் சேதமடைந்திருந்தமையினாலும், வளங்கள் இல்லாமல் இருப்பதினாலும் குறித்த பாடசாலை இதுவரை காலமும் மீள இயங்கவில்லை. இப்பகுதியில் வசிக்கு மாணவர்கள் அருகிலுள்ள இடைக்காடு மகா வித்தியாலயம், அச்சுவேலி மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்குச் சென்றே தற்போது கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .