2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

உரம் கலந்த பனம் வெல்லம் உற்பத்தி செய்தமைக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 01 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

மனித பாவனைக்கு உதவாத விவசாய பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படும் உரத்தைப் பயன்படுத்தி பனைவெல்ல உற்பத்தி செய்த ஊர்காவற்றுறை பனை தென்னை வளக்கூட்டுத்தாபனத்தின் முகாமையாளருக்கு 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்துறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் திங்கட்கிழமை (01) உத்தரவிட்டார்.

அத்துடன், உரம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்ட வெல்லக்கட்டிகளை எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் விற்பனை நிலையங்களிலிருந்தும் மீளப்பெறப்பட்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் கையளிக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார். மேலும், தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்துவதற்கும் நீதவான் அனுமதியளித்தார்.

ஊர்காவற்றுறை பொதுச் சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால், கடந்த 13ஆம் திகதி ஊர்காவற்றுறை பனை தென்னைவளக் கூட்டுத்தாபனத்தின் பனைவெல்லம் உற்பத்தி நிலையத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, உரம் பயன்படுத்தி பனைவெல்லம் உற்பத்தி செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஊர்காவற்றுறை பொதுச்சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

மேற்படி வழக்கு கடந்த 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பனைவெல்லம் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 125 கிலோக்கிராம் உரத்தையும், அவ்வுரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட 114 கிலோக்கிராம் பனைவெல்லத்தையும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நீதிமன்றத்தில் பாரப்படுத்தினார்.

இதன்போது, ஊர்காவற்றுறை பனை தென்னைவளக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் வாதாடிய சட்டத்தரணி, மேற்படி செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக திங்கட்கிழமை (01) வரை கால அவகாசம் கோரியிருந்தார்.

இந்நிலையில் மேற்படி வழக்கு திங்கட்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஊர்காவற்றுறை பனை தென்னைவளக் கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனையடுத்து, நீதவான் அபராதம் விதித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .