2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அத்துமீறிய கடற்றொழிலை நிறுத்த நடவடிக்கை எடுக்கவும்: டக்ளஸ்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துமீறிய வகையில் கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் தென்பகுதி கடற்றொழிலாளர்களினால் வட பகுதி கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இதனைத் தடுத்து நிறுத்தி வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க உடன் நடவடிக்கை தேவை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் வகையிலும் அவர்களது தொழில் உபகரணங்களை அழித்தும் கடல் வளத்தை சுரண்டியும் இந்திய கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அத்துமீறியதும் தடை செய்யப்பட்டதுமான செயற்பாடுகளினால் எமது கடற்றொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் அத்துமீறி தொழில்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்களிடமிருந்து எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவ்வாறான அத்துமீறிய செயற்பாடுகளுக்கு பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் துணை போவதாகவும் இதனைத் தட்டிக் கேட்கும்போது இன ரீதியிலான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக்கூடிய செயற்பாடுகள் அங்கு முன்னெடுக்கப்படுவதாகவும் அங்கு வாழ்ந்துவரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நாட்டில் சுமுகமானதொரு சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சுய லாபங்களுக்காக இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

அத்துடன் கடந்த காலங்களில் பல்வேறு பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ள எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் அக்கறையுடன் செயற்பட்டுவரும் நிலையில் அத்துமீறியதும், தடை செய்யப்பட்டதுமான கடற்றொழில் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது.

எனவே இவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X