2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'இளையோரை இணைத்தால் கூட்டுறவுக்கு புதுவேகம் பிறக்கும்'

Gavitha   / 2015 ஏப்ரல் 29 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டுறவு அமைப்புகள் பல சாதனைகளை நிகழ்த்திய காலம் ஒன்றிருந்தது. ஆனால், இன்று கூட்டுறவுத்துறை நலிவடைந்திருப்தோடு, கூட்டுறவு அமைப்புகளுக்கும் சமூகத்துக்கும் இடையிலான இடைவெளியும் அதிகரித்து வருகிறது. கூட்டுறவுத்துறையின் இந்தச் சரிவுக்குப் பல காரணங்கள் உண்டு.

அதில் இளையோர் பற்றாக்குறையும் ஒன்று. இளையோரை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டால், கூட்டுறவுத்துறைக்கு புதுவேகம் பிறக்கும் என்று வடக்கு விவசாய கூட்டுறவுத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கி புதன்கிழமை (29) நெடுங்கேணியில் திறந்து வைக்கப்பட்டது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,

கூட்டுறவு அமைப்புகளின் தலைமைப் பதவிகளிலும் நெறியாளர்  குழுவிலும் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களே உள்ளனர். கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்கு இவர்களின் அனுபவ அறிவு அவசியம். அதேசமயம் கூட்டுறவுத்துறைக்குப் புது இரத்தம் பாய்ச்சுவதற்கு இளையோரை கணிசமான அளவில் இணைத்துக் கொள்ளுவதும் அவசியம். இளையோரைக் கூட்டுறவின் மீது நாட்டம் கொள்ளத்தக்க வகையில் கூட்டுறவுக் கட்டமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும்.  

கூட்டுறவுத்துறையில் நாம் பாரம்பரிய அணுகுமுறைகளையே இப்போதும் கடைப்பிடித்து வருகிறோம். தனியார்துறை தற்போது பலம்மிக்க துறையாக உருவெடுத்துள்ளது. திறந்த பொருளாதாரக் கொள்கையால் நமது உள்ளூர் தரம் சர்வதேச தரத்துக்கு முகங்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சவால்களையெல்லாம் எதிர்கொள்ளத்தக்க வகையில் கூட்டுறவுத்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தினால், கூட்டுறவு மீண்டும் மிடுக்கோடு நிமிரும் காலம் விரைவில் வரும் என்றார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் கே.ரி.லிங்கநாதன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வவுனியா மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கு.ரவீந்திரநாதன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .