2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சி.வி.க்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முடியாது: தவராசா

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவர முடியாது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் அதற்கான அனுமதி இல்லை என்று வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் நடுநிலை வகிக்கப்போவதாக அறிவித்தமையால் தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், முதலமைச்சருக்கு எதிராக வடமாகாண சபையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே தவராசா மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுகின்றது என்பது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் நான் அறியவில்லை. ஆனால் 13ஆவது திருத்தச் சட்டப்படி அவ்வாறு செய்வதற்கு சாத்தியமில்லை' என்றார்.

'தேர்தலில் நடுநிலை வகிப்பதாக முதலமைச்சர் கூறியிருப்பதால் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. தனிப்பட்ட நபர்களுக்காக பிரசாரம் செய்யமாட்டேன் என அவர் கூறியிருப்பது ஏற்கத்தக்கது. விருப்பு வாக்கு அடிப்படையிலான தேர்தல் என்பதால், தான் பிரசாரம் செய்ய முடியாது என அவர் கூறியுள்ளார். ஆனால், அவரும் விருப்பு வாக்கின் அடிப்படையிலேயே முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.

கூட்டமைப்பு என்ற ரீதியில் அவர் பிரசாரங்களில் ஈடுபட்டிருக்கலாம். அது கட்சிக்கான பிரசாரமாக அமையும். எமது கட்சியிலும் சிலர் நடுநிலையாகவுள்ளனர். அவர்கள் தனிநபர்களுக்காக அல்லாது கட்சிக்காக பிரசாரம் செய்கின்றனர். இதனை முதலமைச்சரும் செய்திருக்க முடியும்' என்று தவராசா மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .