2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆலயத்தின் பசுக்கள் இறைச்சிக்கு விற்பனை

Gavitha   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்குச் சொந்தமான பசுக்கள், இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுவருவதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்துக்குச் சொந்தமான கன்றுகள், பசுக்கள் மற்றும் எருதுகள் என்பன திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினால் விற்கப்பட்டு வதை செய்யப்படுவதைக் கண்டித்தும், இறைச்சிக்காக வதை செய்யப்பட்ட ஆவினங்களின் ஆத்மா சந்திக்கான பிரார்த்தனையும் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் புனிதத் தன்மையையும் தமிழர்களின் அடையாளத்தையும் அழிக்கும் நோக்கிலும், கன்றுகளுடன் கூடிய  பசுக்கள் மற்றும் எருதுகளும் விற்பனை செய்யப்பட்டு, திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபையினர் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாக, ஆலய பக்தர்களும் திருப்பணிச் சபையின் சில முக்கிய உறுப்பினர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்துக்குச் சொந்தமான பசுக்களை விற்பனை செய்யக்கூடாது என ஆலய திருப்பணிச் சபையின் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டபோதிலும், அதனையும் மீறி சிலர், பசுக்களை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பசுக்கள் எதையும் விற்பனை செய்யப்படவில்லை என்று திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபை மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த மறுப்பை ஏற்க முடியாது என்றும் மாடுகள் விற்பனை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் திருப்பணிச் சபையின் சில உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். பசுக்கள் விற்பனை செய்யப்பட்டதற்கு ஆதாரமான பற்றுச்சீட்டுக்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதில், 'தற்போது வரை 39 பசுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 13 ஆவினங்கள் காப்பாற்றப்பட்டு, அங்கத்தவர் ஒருவரின் பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 9 ஆவினங்கள் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன. ஏனைய 17 ஆவினங்களின் நிலைப்பாடு கேள்விக்குறியாக உள்ளது' என திருக்கேதீஸ்வர ஆலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X