2025 ஜூலை 19, சனிக்கிழமை

எமது மீன் வங்கிகள் இரண்டு அழிவடைகின்றன

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தின் மீன் வங்கிகள் எனப்படும் வடமராட்சி கடல் மற்றும் நெடுந்தீவு கடல் ஆகியன இந்திய மீனவர்களின் தடை செய்யப்பட்ட உபகரணங்களின் பயன்பாட்டால் அழிவடைவதால் எதிர்கால சந்ததியினருக்கு மீன் வளம் இல்லாமல் போகவுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தலைவர் கே.என்.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யுமாறு கடிதம் எழுதும், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தங்கள் மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் எனச் சொல்கின்றார் இல்லை. எங்கள் எல்லையை தாண்டாதீர்கள் என அவர்களிடம் மண்டையிட்டுக் கேட்டும் எவ்வித பயனும் இல்லை.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் சீனக் கொடிகளுடன் காணப்பட்ட படகுகளும் எங்கள் எல்லைகளை ஆக்கிரமித்தன என்றார்.

யாழ்.மாவட்ட கடற்றொழில் சம்மேளனத் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் கூறுகையில்,

எல்லைகள் தெரியாமையால், மீனவர்கள் எல்லை தாண்டுவதும் ஒரு காரணம். அதனால் இரண்டு நாட்டு அரசாங்கங்களும் மீனவர்களின் படகுகளில் எல்லை தாண்டுவதற்கான ஒலியமைப்பை பொருத்த வேண்டும். இதன்மூலம் ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறை பேராசிரியர் ஏ.எஸ்.சூசையானந்தன் கூறுகையில்,

எல்லை மீறும் மீனவர்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய எமக்கு பச்சைத் துரோகம் செய்கின்றது. மீனவர்களைக் கட்டுப்படுத்தாமல் தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களை மோதவிட்டுப் பார்க்கின்றது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X