2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சிறுவன் மீது தாக்குதல்: இருவர் கைது

Niroshini   / 2016 மார்ச் 15 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம், தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியிலுள்ள மரக்காலையில் பணிபுரியும் 17 வயது சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில்,  இரண்டு சந்தேக நபர்களை திங்கட்கிழமை (14) கைது செய்துள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்தார்.

'கடந்த வருடம் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களே இந்தத் தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

தாக்குதல் மேற்கொண்ட கும்பல் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் இலக்கம், போக்குவரத்து திணைக்களத்துக்கு அனுப்பி அதிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், ஏனையோரும் கைது செய்யப்படுவார்கள்' என்றார்.

'பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பாரிய காயங்கள் ஏதும் இல்லை. இருப்பினும், அது தொடர்பில் சட்ட வைத்தியதிகாரியே தெரியப்படுத்த வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியில் அமைந்துள்ள மரக்காலைக்குள் பொல்லுகள், கைக்கிளிப்புக்களுடன் சென்ற 15 பேர் கொண்ட கும்பலொன்று அதேயிடத்தைச் சேர்ந்த கே.கேமராஜன் (வயது 17) என்ற சிறுவனைக் கடுமையாகத் தாக்கியது.

இதில் படுகாயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X