2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டும்:டக்ளஸ்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

காணாமற்போனோரை கண்டறிதல், இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது, நடந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருதல், பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரம் செய்யப்பட வேண்டும், நீண்டகால நோக்கில் தேசிய நல்லிணக்கம் பலப்படுத்தப்பட வேண்டும் போன்ற விடயங்களை பெறுவதில் அதிக அக்கறை காட்டப்பட வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை புனரமைக்க வேண்டியுள்ளமையால், அது தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

தெற்கில் எவ்வாறான அரசாங்கம் அமையவுள்ளது என்பது தொடர்பில் இன்னமும் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுதல், அமைச்சுக்களைப் பெற்றுக்கொள்ளுதல் என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. கட்சியின் புனரமைப்புப் பணியில் அதிகளவு நேரத்தைச் செலவிட்டு வருகின்றேன் என்றும் அவர் கூறினார்.  

தமிழ் மக்களின் நலன் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கையை எடுக்க முடியுமோ அதன் அடிப்படையில் செயற்படுவோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடி வருகின்றேன் என்றார்.

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க பாடுபடுவோம்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும் விதத்தில் எமது செயற்பாடுகள் அமையும். எங்கிருந்து நீதி கிடைக்கும் அல்லது பரிகாரம் கிடைக்கும் என்பதின் அடிப்படையிலேயே எமது நிலைப்பாடு இருக்கும்.

தேர்தலில் வாக்குகளை அபகரிக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சர்வதேச விசாரணை என்பதை பிரசாரம் செய்தனர். சர்வதேச விசாரணை கோருவது நடைபெறாது என்பதும் உள்ளக விசாரணையென்பதே நடைபெறும் என்பதும் எங்களுக்கு முன்னரே தெரியும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதற்கான அணுகுமுறைகளை நாங்கள் முன்னெடுப்போம் என்றும் அவர் கூறினார்.  

மக்களுக்கு வீணை பரீட்சயமாகவில்லை

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கடந்த 10 வருடங்களாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் தான் தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், இம்முறை தேர்தலில் எமது சின்னமான வீணைக்கு மாறியமையால் மக்கள் பரீட்சயமில்லாமல் குழம்பியதன் காரணமாக எமக்கான வாக்குகள் குறைவடைந்தன.

இந்தக் குழப்பத்தால் நடைபெற்று முடிந்த தேர்தலில் எமது கட்சிக்கு வாக்களிப்பதாக நினைத்த பல மக்கள் வெற்றிலைக்கு வாக்களித்துள்ளனர். இதனாலேயே வெற்றிலைக்கான வாக்குகள் அதிகரித்துள்ளன. இது தொடர்பில் தேர்தலில் பின்னர் மக்கள் பலர் என்னிடம் தெரிவித்தனர் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .