2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கையிலிருந்து மாறுகின்றதா?

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 02 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கையில் இருந்து மாறி போகின்றதா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்தேகம் தெரிவித்தார்.

நீர்வேலியில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் முன்மொழிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக முன்மொழியவுள்ள விடயம் ஏனைய பெரும்பாலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு தெரியாது. என்ன காரணத்துக்கு அவ்வாறு இரகசியமான முறையில் இந்த விடயம் கையாளப்பட்டது என்பது தெரியவில்லை.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்ட பின்னர் எதிர்த்தரப்பில் இருந்து ஆளும் தரப்புக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அதன் பொருள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் தரப்புக்கு ஆதரவாக செயற்பட போகின்றதா? அவ்வாறு அவர் அழைத்து செல்லப்பட்டதன் பொருள் என்ன என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் தெரியப்படுத்த வேண்டும்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நாளை வியாழக்கிழமை (03) தெரிவு செய்யப்படுவார் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த ஒருவர் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன் தலைவர் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்படவுள்ளார்.

இந்த அரசாங்கத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக செயற்பட போகின்றதா? இல்லை எதிர்த்தரப்பாக செயற்படப் போகின்றதா? என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்படுவாராயின் அவர் தனியே வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினையை மாத்திரம் கதைக்க முடியாது. ஒட்டு மொத்த இலங்கை மக்களின் பிரச்சினை தொடர்பிலும் கதைக்க வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்படுவாராயின் தற்போது உள்ளதை விட சர்வதேச நாடுகளுடனான நெருக்கம் அதிகரிக்கும். அதனூடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கலாம். ஆனால், இந்த சந்தர்ப்பத்தை எவ்வாறு அவர் பயன்படுத்தப் போகின்றார் எனத் தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .