2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தமிழக முதலமைச்சருக்கு சிவசக்தி நன்றி தெரிவிப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சரினால் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந. சிவசக்தி ஆனந்தன்  நன்றி தெரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

'தமிழக சட்டமன்றத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரினால் முன்மொழியப்பட்டு,  ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் என்ற வகையிலும், வன்னி மக்கள் சார்பிலும் எனது எனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

1983ஆம் ஆண்டு இனக்கலவரம் என்ற பெயரில் இடம்பெற்ற இனப்படுகொலையின் போது, அன்றைய முதல்வர் புரட்சித்தலைவர்  எமக்குப் புகலிடம் கொடுத்ததுடன், மாணவர்கள் அவர்களது  பாடசாலைக் கல்வி முதல் பல்கலைகழக கல்வி வரை எவ்விதத் தடங்கலுமின்றி தொடர்வதற்கு வழியேற்படுத்திக் கொடுத்திருந்தார்'  என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

'இன்றைய முதல்வர், வன்னியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை, இனப்படுகொலை என்று தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றி, எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற  நோக்கில், இந்திய அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தனது சக்தியைப் பயன்படுத்தி தமிழக மக்களின் அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளார்.

அடுத்ததாக, சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசை நிறுத்த வேண்டும். அதற்கு இந்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தையும் ஏகமனதாக நிறைவேற்றியிருந்தார்' என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களுமே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. தேசிய கட்சிகள் கூட தமிழக மக்களின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து மாநில சட்டப்பேரவையில் முதல்வரின் தீர்மானத்துக்கு ஆதரவளித்தமையை நாம் வெகுவாகப் பாராட்டுகின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .