2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

நம்பிக்கை மோசடி செய்த நையீரிய நாட்டைச் சேர்ந்த மூவருக்கு விளக்கமறியல்

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 11 இலட்சம் ரூபாய் பணத்தை நம்பிக்கை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நையீரியா நாட்டைச் சேர்ந்த மூவரையும் தொடர்ந்து விளக்கமறியல்pல் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று (13) உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வாகனம் ஒன்றை அனுப்பி வைப்பதாக தென்னிலங்கையிலிருந்து அலைபேசி ஊடாக தொடர்பு கிடைத்துள்ளது. அது தொடர்பில் ஆராயாமல் அந்த நபர், அழைப்பு எடுத்தவரின் தகவலுக்கு அமைய வாகனத்தைப் பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டியுள்ளார்.

அதனைப் பயன்படுத்தி தனது வங்கி கணக்கு இலக்கத்தை வழங்கி அதற்கு பணம் வைப்பிலிடுமாறு கோண்டாவிலையைச் சேர்ந்தவரிடம் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய அவர் 11 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் பணத்தை அலைபேசியில் தொடர்புகொண்ட நபர் வழங்கிய வங்கியில் வைப்புச் செய்துள்ளார்.

எனினும் சில மாதங்கள் கடந்த போதும் அந்த நபரின் தொடர்பு கிடைக்காத்தால் அவரின் அலைபேசி இலக்கம் மற்றும் வங்கிக் கணக்கிலக்கம் என்பவற்றை மட்டும் யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் கோண்டாவிலைச் சேர்ந்தவர் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நீர்கொழும்பு நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நையீரிய நாட்டைச் சேர்ந்த மூவரைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அவர்களை கடந்த ஒரு மாத காலமாக யாழ்ப்பாணம் நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது.

இந்த நிலையில் அவர்களுக்கு எதிரான வழக்கு நேற்று (14) யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

“சந்தேகநபர்கள் மூவருக்கும் இந்த மோசடிக்கும் எந்தவொரு தொடர்புமில்லை. அவர்களுக்கு இங்கு வங்கிக் கணக்குமில்லை. பணம் வைப்பிலிட்ட வங்கிக் கணக்கு விவரம் தொடர்பில் பொலிஸார் முழுமையான விசாரணையை முன்னெடுக்கவில்லை. முறைப்பாட்டாளரின் அலைபேசிக்கு வந்த இலக்கத்தை வைத்து விசாரணைகளை துரிதமாக முன்னெடுத்தால் உண்மையாக மோசடியாளரைக் கைது செய்யலாம். எனவே சந்தேகநபர்களான வெளிநாட்டவர்களை பிணையில் விடுக்கவேண்டும்” என்று அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

சந்தேநபர்களை பிணையில் விடுவிக்க பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்தனர். இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று, சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், விசாரணைகளைத் துரிதப்படுத்த பொலிஸாரை அறிவுறுத்தியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .