Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
எம். றொசாந்த் / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற சான்றுப்பொருள்கள் அறையை உடைத்து கஞ்சா திருடிய மூவருக்கு தண்டப்பணம் விதித்து இன்று (07) யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
எனினும், திருட்டு குற்றச்சாட்டு வழக்கு, விசாரணைகளுக்காக திகதியிடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சான்றுப்பொருள்கள் அறை உடைக்கப்பட்டு 27 இலட்சம் ரூபாய் பெறுமதியான 12 பொதிகளாக கட்டப்பட்டிருந்த சான்றுப்பொருளாக கேரளா கஞ்சா திருடப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா பிரசாந்தன் அல்லது குமா அல்லது குகன், பத்மநாதன் தர்சன் மற்றும் கணேசன் நதீஸ்வரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் 2 கைக்கோடரிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர்களிடம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்று சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழக்கேடுகள் கையளிக்கப்பட்டன.
சந்தேகநபர்கள் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் தனித்தனியே குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன், அரச சொத்தைத் திருடிய குற்றச்சாட்டுக்கு மூவருக்கு எதிராகவும் தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, 6 கிலோ 255 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை சந்தேகநபர்கள் மூவரும் மன்றில் ஏற்றுக்கொண்டனர். எனினும் அரச சொத்தான கஞ்சா சான்றுப்பொருளைத் திருடிய குற்றச்சாட்டை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனையடுத்து, “நடராசா பிரசாந்தன் என்ற எதிரிக்கு 2 குற்றங்களுக்குமாக 80 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்படுகிறது. அதனை அவர் செலுத்தத் தவறின் 8 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும். பத்மநாதன் தர்சன் மற்றும் கணேசன் நதீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு குற்றங்களுக்குமாக தலா 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்படுகிறது. அதனை அவர்கள் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றவாளிகள் மூவரும் தண்டப் பணத்தைச் செலுத்தத் தவறியதால் சிறைத் தண்டனைக்கான கட்டளையை மன்று வழங்கியது.
மேலும், அரச சொத்தைத் திருடிய குற்றச்சாட்டு மீதான விசாரணைக்கு திகதியிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
4 hours ago