2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நெருக்கடியை போக்க விவசாயத்தை பெருக்கவும்

Princiya Dixci   / 2022 மே 24 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

தற்போதைய நெருக்கடியை போக்குவதற்கு விவசாயத்தை வலுப்படுத்தி உற்பத்தியை பெருக்கும் மூலோபாயம் தொடர்பாக அரசு சிந்திக்கவேண்டும் என்று வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வவுனியா ஊடக அமையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,

“நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றது. இன்று எரிபொருளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள், எதிர்காலத்தில் உணவுக்காக அலையப்போகும் அவலநிலை காணப்படுகின்றது. கடந்த காலங்களில் அரசாங்கங்கள் செய்த தவறால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.  

“எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றையே இன்று இறக்குமதி செய்யும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிடம் கடன் வாங்குகின்றார்களே தவிர, விவசாயத்தை வலுப்படுத்தி உள்ளூர் உற்பத்தியை பெருக்குவதற்கான வழிகாட்டல்களை யாரும் வழங்கவில்லை.

“எனவே, எமக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். விவசாயிகளான நாங்கள் தோட்டச் செய்கைக்கான எரிபொருள் இல்லாமல் அல்லல்படுகின்றோம். எனவே, எமக்கான மண்ணெண்ணை  மற்றும் டீசலை தந்து உதவுமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.

“வவுனியாவை பொறுத்தவரை எரிபொருளில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலமே பயிர்செய்கை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே, இதனால் நாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

“இந்த நாட்டுக்காக பெருமளவு மரக்கறிகளை உற்பத்திசெய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். இங்கு 9 கமநல சேவை நிலையங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு நேரடியாக எரிபொருளை வழங்குவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்ப்படுத்துவதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.  

ஊடகசந்திப்பில்  சம்மேளனத்தின் தலைவர் செ.சிறிதரன், செயலாளர் இ.பகிரதன், பொருளாளர் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .