Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வரலாற்று ரீதியில் தொன்மைமிக்க புராதனச் சின்னமாக விளங்கும் யாழ்.கோட்டையை, படையினர் நிலை கொள்வதற்குப் பயன்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படக் கூடாது” என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
“யாழ். மாவட்டத்தில், பொது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களில், தற்போது நிலைகொண்டுள்ள படையினரை, தேசியப் பாதுகாப்பின் தேவை கருதி, அம்மாவட்டத்தின் சனத்தொகைக்கும், இன விகிதாசாரத்துக்கு ஏற்பவும் பொருளாதார ரீதியில் பெறுமதியற்றதான அரசுக்குரிய தரிசு நிலங்களுக்குள் நிலை கொள்ளத்தக்க ஏற்பாடுகளே முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரது இருப்புகள் அமைந்துள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களின் சனத் தொகைக்கும், இன விகிதாசாரத்துக்கும் ஏற்பவே அவை அமைந்திருக்க வேண்டும்.
மேற்படி படைகள் நிலைகொண்டிருக்கக்கூடிய காணி, நிலங்கள் கடற்றொழில், விவசாயச் செய்கைகள் போன்ற எமது மக்களின் வாழ்வாதாரங்களுடன் தொடர்புடைய வளங்களைக் கொண்ட பொருளாதார ரீதியில் முக்கியத்துவமான காணி, நிலங்களாக இருக்கக்கூடாது என்பதையும் எமது நிலைப்பாடாக நாம் மிகத் தெளிவாகவே முன்வைத்து வருகின்றோம்.
யாழ். கோட்டை என்பது, எமது பகுதியில் இருக்கக்கூடிய புராதன வரலாற்று அடையாளங்களுள் ஒன்றாகும். அந்த வகையில், கடந்த கால அசாதாரணச் சூழ்நிலைகளின் போது பாரிய சேதங்களுக்கு உட்பட்டிருந்த மேற்படி கோட்டையையும் அதனது சுற்றுப் புறங்களையும், மீளப் புனரமைப்புச் செய்வதற்கு கடந்த காலங்களில் நாம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு, போதியளவில் அதனை நிறைவேற்றியும் வந்துள்ளோம்.
மேற்படி புனரமைப்பு நடவடிக்கைகளில் இன்னும் எஞ்சியிருக்கின்ற பணிகளை மேற்கொள்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அவதானத்துக்கும் நாம் கொண்டு வந்து, தற்போது அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய சூழுலில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கவருகின்ற ஓர் இடமாகவும் யாழ்.கோட்டை விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இத்தகையதொரு நிலையில், அதனை படைகளின் தேவைகளுக்காக, மீள வழங்குவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எமது தொன்மைகளையும் கலாசார பாரம்பரியங்களையும், அழிக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட நாம் தயாராக இல்லை. எமது தொன்மைகள், கலாசார, பாரம்பரியங்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டிலிருந்தே ஏற்கெனவே, கடந்தகால அனர்த்தங்கள் காரணமாக அழிக்கப்பட்டவற்றை நாம் ஆக்கப்பூர்வமான நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறோம்.
அந்த வகையில், படைகளின் தேவைகளுக்காக, யாழ். கோட்டையைப் பயன்படுத்து தொடர்பிலான கருத்துக்கு இடமில்லை” என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago