2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பயிற்சித்தர விவசாயப் போதனாசிரியர்களாக 22 பேர் நியமனம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண விவசாய அமைச்சால், பயிற்சித்தர விவசாயப் போதனாசிரியர்களாக 22 பேருக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு, வடமாகாண விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (23) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கிவைத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் விவசாயப் போதனாசிரியர்களுக்கென, 161 ஆளணி அங்கிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், அண்மையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட விவசாயப் போதனாசிரியர்களுடன் சேர்த்து 98 பேரே இப்பணி நிலையில் தற்போது கடமையாற்றி வருகின்றனர்.

விவசாயப் போதனாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்,  க.பொ.த உயர்தர விஞ்ஞானப் பிரிவில் இரசாயனவியல், பௌதிகவியல் மற்றும் உயிரியல் அல்லது விவசாய விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களில் சித்தியடைந்திருப்பதோடு, விவசாயத்தில் டிப்ளோமா பட்டமும் பெற்றிருத்தல் வேண்டும்.

ஆனால், இத்தகைமைகளுடன் போதிய விண்ணப்பதாரிகள் இல்லாமையிலேயே, விவசாயப் போதனாசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இன்னும் நிரப்பப்படாத நிலையில் உள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு, விவசாய அமைச்சு விசேட அனுமதிபெற்று, அண்மையில் விவசாயப் பட்டதாரிகளையும் விவசாயப் போதனாசிரியர்களாக இணைத்துக்கொண்டது. எனினும், விவசாயப் பட்டதாரிகளும் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் ஏனைய வெற்றிடங்களை முழுமையாக நிரப்ப முடியாதுள்ளது.

விவசாயப் போதனாசிரியர் பற்றாக்குறைவால், விவசாய விரிவாக்க  நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவதால், விவசாய டிப்ளோமா பட்டம் பெறாமல் க.பொ.த. உயர்தர உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றவர்களையும் பயிற்சித்தர விவசாயப் போதனாசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கு வடக்கு விவசாய அமைச்சு விசேட அனுமதிபெற்று அண்மையில் நேர்முகத்தேர்வு ஒன்றை நடத்தியிருந்தது.

இத்தேர்வின் அடிப்படையிலேயே, தற்போது புதிதாக 22 பயிற்சித்தர விவசாயப் போதனாசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள்; விவசாயப் பாடத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றால்,  விவசாயப் போதனாசிரியர்களாகத் தரமுயர்த்தப்படுவார்கள் எனவும்  இக்கற்கைநெறியைப் கற்பதற்கான ஏற்பாடுகள் விவசாயத் திணைக்களத்தால் செய்து கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .