2025 ஜூன் 28, சனிக்கிழமை

‘போராட்ட நிலைமையை உருவாக்கி வருகின்றனர்’

Editorial   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எங்கெங்கு எமது மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் உரிமைப் போராட்டங்கள் எழவேண்டிய நிலைமையையே, ஆட்சி அதிகாரங்களில் இருக்கின்றவர்கள் உருவாக்கி வருகின்றனர்” என, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

வடக்கு மாகாண இளைஞர், யுவதிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“வேலைவாய்ப்பு விடயத்தில், மத்திய அரசாங்கத்தைப் போன்றே மாகாண அரசாங்கத்தாலும், வடக்கு மாகாண இளைஞர் -யுவதிகள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். இதற்கெதிராக, எமது இளைஞர்கள் - யுவதிகள் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்த முயற்சிகள் மற்றும் போராட்டங்கள், மத்திய அரசாங்கத்தைப் போன்றே மாகாண அரசாங்கத்தாலும் புறந்தள்ளப்பட்டிருந்த நிலையையே காணக்கூடியதாக இருந்தது.  

“இந்த நிலையில், சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக மீண்டும் எமது இளைஞர், யுவதிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலமாக குளிர்காய முயலாமல், இன்றைய மத்திய மற்றும் மாகாண ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள், வடக்கு மாகாண இளைஞர், யுவதிகளது முக்கியப் பிரச்சினையாகவுள்ள வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும். 

“வடக்கு மாகாண இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, கடந்த காலங்களில் நாம் இயன்றளவு நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். தொடர்ந்து நாம் அரசியல் அதிகாரத்தில் பலம் பெற்றிருந்தால், மேற்படி பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலான எமது நடவடிக்கைகள் படிப்படியாகத் தொடர்ந்திருக்கும்.  

“தற்போதைய நிலையில், எமது இளைஞர், யுவதிகளுக்கான அரச வேலைவாய்ப்புகள், மத்திய அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலையில்தான், நாம் மறைந்த ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாசவால் கொண்டுவரப்பட்டு. சில காலம் செயற்படுத்தப்பட்டிருந்த 1990/15ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம், அரச தொழில்வாய்ப்புகளில் இனவிகிதாசாரம் பேணப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். 

“அதேநேரம், வடக்கு மாகாண சபையாலும், எமது இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினையைப் போதியளவு தீர்க்க முடியும். பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இருந்தும், அத்தகைய முயற்சிகள் ஏதும் இதுவரையில் நடைபெற்றிராததும், எமது இளைஞர்களிடையே  பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. 

“எமது மக்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினையைத் தீர்ப்பதானது, எமது இன உரிமையை அடகு வைப்பதாகாது. வேலைவாய்ப்பு என்பது, எமது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். எனவே, எமது இளைஞர்களது எழுச்சியானது, தங்களது அடிப்படை மற்றும் ஏனைய உரிமைகளை மறுக்கின்ற - உதாசீனம் செய்கின்ற அனைத்துத் தரப்பினருக்கும் எதிரானதாகவே இருக்க வேண்டும். அது, மத்தியானலும் சரி மாகாணமானாலும் சரி, எங்கெங்கு எமது மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் உரிமைப் போராட்டங்கள் எழவேண்டிய நிலையையே ஆட்சி அதிகாரங்களில் இருக்கின்றவர்கள் உருவாக்கி வருகின்றனர்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .