2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழில் 1,300 ஹெக்டெயர் நிலப்பரப்பில் வெங்காயச்செய்கை

Editorial   / 2018 மார்ச் 15 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செந்தூரன் பிரதீபன்

“யாழ் மாவட்டத்தில் இவ்வருடம் 1,300 ஹெக்டெயர் நிலப்பரப்பில் வெங்காயச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக” வடமாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த 2 ஆண்டுகளாக வெங்காய உற்பத்தியில் யாழ் மாவட்டம் பாரிய வீழ்ச்சியினை எதிர்கொண்டிருந்தது. இதனால் சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது. வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டே சந்தைக்கு வழங்கப்பட்டிருந்தது. இவ் வருடம் காலநிலை சாதகமாக அமைந்தமையால், வெங்காய உற்பத்தி அதிகரித்துள்ளது.

2016-2017 காலபோக செய்கையில் எதிர்பாராத வகையில், நோய்த்தாக்கம் ஏற்பட்டது. இதனால் எதிர்பார்த்த விளைச்சலை 2016-2017 காலபோக செய்கையில் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது.

அதனை தொடர்ந்து சிறுபோக செய்கையில் விதை வெங்காயம் தேவையாக இருந்தது. காலபோக செய்கையில் பெற்றுக்கொள்ளும் வெங்காயத்தின் ஒரு பகுதியை விவசாயிகள் விதை வெங்காயமாக களஞ்சியப்படுத்தி வைத்திருப்பார்கள். காலபோகத்தில் வெங்காயத்தின் உற்பத்தி குறைவாக காணப்பட்டதால் 2017 சிறுபோகத்துக்கு, வெங்காயத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.

2017- 2018 சிறுபோக செய்கையை விவசாயிகள் வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தனர். இதனால் விதை வெங்காயத்தை பெற்றுக்கொள்ள ஏதுவாக இருந்தது. அத்துடன் திணைக்களம் ஊடாக சில திட்டங்களை நாங்கள் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்திருந்தோம். உண்மை விதைகளை வழங்கி உண்மை விதைகள் ஊடாக நாற்றுக்களை உற்பத்தி செய்து, அதனூடாக வெங்காயம் உற்பத்தி செய்யும் முறைமையை ஏற்பாடு செய்திருந்தோம். இதன் ஊடாகவும் வெங்காய உற்பத்தி இம்முறை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்ட முடியும். சின்ன வெங்காய செய்கை வடமாகாணத்திலே அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. உண்மை வெங்காய செய்கை மூலம் வெங்காய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக” அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .