2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வடக்குப் பிரச்சினை குறித்து நியூசிலாந்தில் பேச்சு

George   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நியூசிலாந்திலிருந்து அழகன் கனகராஜ்

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எவ்வாறான உதவிகளை வழங்கமுடியும் என்பது தொடர்பிலும் இலங்கையில் வடக்கு பிரச்சினை குறித்தும், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விரிவாகக் கலந்துரையாடியதாக, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்தார்.   

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் தலைமையிலான குழு, கடந்த வெள்ளிக்கிழமை, நியூசிலாந்தை வந்தடைந்தது.   

அதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, தலைமையிலான குழுவினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில், இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று, ஹொக்லேன்டில் உள்ள அரசாங்க இல்லத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.   

இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், நியூசிலாந்துப் பிரதமரும் இலங்கை பிரதமரும் இணைந்து, கூட்டாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அங்கு தொடர்ந்து உரையாற்றிய நியூசிலாந்துப் பிரதமர், “இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்வது தொடர்பில், பரந்தளவில் ஆராயப்பட்டது. வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட விடயங்களுக்கு இந்தச் சந்திப்பின் போது முன்னுரிமை கொடுக்கப்பட்டது” என்றார்.   

“அத்துடன் கொழும்பில், நியூசிலாந்து தூதுவரலாயத்தை நிறுவுவது தொடர்பிலும் இந்தச் சந்திப்பின் போது கூடுதல் கரிசனை காட்டப்பட்டது. இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையில், பொருளாதாரம் மற்றும் விவசாயம், பாற்பண்ணை உள்ளிட்ட துறைகளில் எவ்வாறான ரீதியில் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது என்பது குறித்தும் ஆராயப்பட்டது” என்றும் அவர் கூறினார்.   

“அதற்கு அப்பால், இலங்கையின் வடமாகாணம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அரசியலமைப்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும், விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இவ்விரு விடயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில், எமது தரப்பின் சார்ப்பில், இலங்கைப் பிரதமர் உள்ளிட்ட குழுவினரிடம் எடுத்தியம்பப்பட்டது” என நியூசிலாந்துப் பிரதமர் மேலும் கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X