2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வல்வெட்டித்துறை நகர சபை தலைவராக கூட்டமைப்பின் கருணானந்தராசா

Shanmugan Murugavel   / 2018 மார்ச் 27 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முருகவேல் சண்முகன், எம். றொசாந்த்

வல்வெட்டித்துறை நகர சபையின் ஆட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற தலைவராக அக்கட்சியின் கோணலிங்கம் கருணானந்தராசா தெரிவானார்.

நகர சபையின் தலைவருக்கான தேர்வு நகர சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றபோது தலைவர் பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சைக் குழுவின் தலைவர் சபாரட்ணம் செல்வேந்திராவை 9-4 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வென்றே நகர சபையின் தலைவராக கோணலிங்கம் கருணானந்தராசா தெரிவானார்.

கோணலிங்கம் கருணானந்தராசாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொன்னம்பலம் சிவஞானசுந்தரம் பிரேரிக்க, அதை அவர்களின் கட்சியின் ஆறுமுகம் ஞானேந்திரன் வழிமொழிந்திருந்தார். சபாரட்ணம் செல்வேந்திராவை அவரின் சுயேட்சைக் குழுவின் தங்கவேலாயுதம் சுந்தரலிங்கம் பிரேரிக்க கணேசமூர்த்தி கஜேந்திரன் வழிமொழிந்திருந்தார்.

இதன் பின்னர் தலைவருக்கான தேர்வு பகிரங்கமானதா அல்லது இரகசியமானதா என வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நகர சபைக்குத் தெரிவான நகரசபையின் முன்னாள் உப தலைவர் கந்தசாமி சதீஸ் சமூகமளித்திருக்காத நிலையில் நகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மிகுதி ஆறு உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினருமாக 11 பேர் பகிரங்க வாக்கெடுப்பைக் கோரியிருந்தனர்.

சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினருமாக ஐந்து பேர் இரகசிய வாக்கெடுப்பைக் கோரியிருந்தனர்.

அந்தவகையில், பகிரங்க வாக்கெடுப்பை பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோரியிருந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆறு உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு உறுப்பினரும் கோணலிங்கள் கருணானந்தராசாவுக்கு வாக்களித்திருந்தனர்.

சபாரட்ணம் செல்வேந்திராவுக்கு அவரின் சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவளித்திருந்த நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்திருக்கவில்லை.

இந்நிலையில், கோணலிங்கம் கருணானந்தராசாவின் தலைமையில் நடைபெற்ற அமர்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆறுமுகம் ஞானேந்திரனை உப தலைவராக அவரது கட்சியின் அன்ரநெற் சுபாசினி முன்மொழிய அதை, அவரது கட்சியின் பாலச்சந்திரன் ஜெகன் வழிமொழிந்தார். வேறு எவரும் போட்டியில்லாமையால் அவர் உபதலைவராக தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .