2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வல்வெட்டித்துறை நகர சபையில் கூட்டமைப்பு ஆட்சியமைக்கிறது?

Editorial   / 2018 மார்ச் 27 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வல்வெட்டித்துறை நகர சபையிலும் எந்தக் கட்சியோ அல்லது சுயேட்சைக் குழுவோ பெரும்பான்மையைப் பெறாத நிலையில், நகர சபையின் தலைவர், உப தலைவரைத் தெரிவுசெய்வதற்கான கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஆட்சியமைப்பதற்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் ஒரு மாதத்துக்கு முதல் ஆரம்பித்த நிலையில் இச்செய்தி எழுதும் வரையிலும் தீர்க்கமான முடிவேதுமில்லாது தொடர்ந்த வண்ணமிருந்தன.

இதில், 17 உறுப்பினர்களைக் கொண்ட நகர சபையில் ஏழு உறுப்பினர்களை வென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆட்சியமைப்பதற்கு மேலும் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்ததாக அதிகமாக நான்கு ஆசனங்களைப் பெற்றுள்ள சுயேட்சைக் குழுவுடன் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு பேச்சுகள் இடம்பெற்றிருந்தன. எனினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

குறித்த பேச்சுகளில், தலா இரண்டு ஆண்டுகள் ஆட்சி என்றதிலிருந்து தொடங்கி, பின்னர் ஓராண்டு-இரண்டாண்டு-ஓராண்டு என மாறி இறுதியில் ஆறு மாதம்-இரண்டாண்டு-ஒன்றரையாண்டு என்ற வரை சென்றிருந்தது.

இச்சந்தர்ப்பத்தில் இன்று இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தலைவர் வேட்பாளர் நிறுத்தப்படவுள்ள நிலையில், சுயேட்சைக் குழு சார்பிலும் வேட்பாளரொருவர் நிறுத்தப்படலாம் எனத் தெரிகின்றது.

இவ்வேளையில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இரண்டு ஆசனங்களையும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒரு ஆசனத்தையும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு ஆசனத்தையும் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியிலிருந்து இரண்டு உறுப்பினர்களின் ஆதரவே தேவைப்படுகின்ற நிலையில் இரண்டு ஆசனங்களைக் கொண்ட கட்சியொன்று ஆதரவுடன் ஆட்சியமைக்குமென்று கூறப்படுகிறது.

மறுபக்கம், சுயேட்சைக் குழு ஆட்சியமைப்பதற்கு மேலும் ஐந்து ஆசனங்கள் தேவைப்படுகின்ற நிலையில், இரண்டு ஆசனங்களைக் கொண்ட கட்சியொன்றின் ஆதரவு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுவதுடன், மற்றைய இரண்டு ஆசனங்களைக் கொண்ட கட்சியுடன் பேச்சுகளில் ஈடுபடுவடுவதாகவும் தனிப்பட்ட ரீதியில் அக்கட்சியின் உறுப்பினர்கள் சுயேட்சைக் குழுவுக்கு ஆதரவளிக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறான நிலையேற்பட்டால் ஒவ்வோர் ஆசனங்களைக் கொண்ட கட்சிகள் ஆட்சியைத் தீர்மானிப்பவர்களாக மாறும்.

இதைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சுயேட்சைக் குழுவின் ஆதரவுடனும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகளை நிராகரிப்பதாகவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .