2025 ஜூன் 26, வியாழக்கிழமை

விடுவிக்கப்பட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள வீதி

Editorial   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

28 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட பொன்னாலை-பருத்தித்துறை வீதியை பொதுமக்கள் பயன்படுத்துவதுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

28 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயத்துள் உள்ளடங்கியிருந்த பொன்னாலை - பருத்தித்துறை வீதியூடாக செவ்வாய்க்கிழமை (06) இலங்கை போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

எனினும் இவ்வீதியை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு முதல் மேற்படி வீதி உள்ளிட்ட பல பிரதேசங்கள் இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்டன. இந்நிலையில், அண்மையில் சில பகுதிகள் படையினரால் விடுவிக்கப்பட்டு பொதுமக்கள் தமது இடங்களில் மீளக் குடியமர்ந்துள்ளனர்.

குடியமர்ந்துள்ள மக்களின் காணிகள் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ள போதும், சுமார் 3 கிலோ மீற்றர் தூரமான வீதியை படையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் சுமார் 50 கிலோ மீற்றர் சுற்றியே செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இருப்பதாக பல்வேறு தரப்பினர்களிடம் அம்மக்கள் முறையிட்டு, அந்த வீதியை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை (05) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி வீதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் தெரிவித்தார்.

இதற்கமைய, வீதியூடான போக்குவரத்துச் சேவை மயிலிட்டியிலிருந்து செவ்வாய்கிழமை (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு, வருகை தந்த மக்கள் அவ்வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

குறித்த வீதியூடாக இலங்கை போக்குவரத்து பஸ் சேவைகள் மட்டுமே இடம்பெறும் எனவும், எனினும் விரைவாக குறித்த வீதி முழுமையான மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்கப்படும் எனவும் நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்.மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கவலை வெளியிட்டுள்ள பொதுமக்கள் இவ்வீதியை முழுமையாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .