2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘விரலுக்கு ஏற்றதே வீக்கம்’

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 01 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணுவோம் என்றே ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில், இன்று (01) இடம்பெற்ற  ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த ஆட்சியை கொண்டு வந்தோம் என கூறுபவர்களும் இது வரை எதுவும் செய்யவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனைக்கு தீர்வுகள் கிடைக்கும் என்றே மக்கள் நம்பி வாக்களித்தார்கள்.

ஆனால் மக்கள் தொடர்ந்தும் வீதிகளில் போராடாடிக்கொண்டே இருக்கின்றார்கள்.

இதே போன்றே மாகாண சபையில் தாம் ஆட்சி அமைத்தால் அதை பெற்றுக்கொள்வோம், இதை பெற்றுக்கொள்வோம் என கூறி வந்தார்கள். இன்று அவர்களே வடமாகாண சபை ஐந்து வருடத்தை வீணாக்கி விட்டார்கள் எனவும் தமது அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டார்கள் என கூறுகின்றனர்.

எங்களை பொறுத்தவரையில் எவர் மத்தியில் ஆட்சி புரிந்தாலும், தமிழ் மக்களுக்கு என்ன தேவையோ அதனை பெற்றுக்கொடுக்க முனைவோம்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நேற்று (28) நடைபெற்ற ஆளும் கட்சிகளின் சந்திப்பில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் சந்திப்பு நடந்துள்ளது.

யாழ்ப்பாணம் இராணுவத்தினர் கைகளுக்கு வந்த போது , மக்கள் மீள்குடியேறிய போது நாமும் யாழ்ப்பாணம் வந்தோம். அதன் போது யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பிரச்சனைகள் இருந்த போது, முதல் முதல் நாமே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தை உருவாக்கினோம். பின்னர் அது வேறு ஆட்களின் கைகளில் போயுள்ளது.

மற்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் போல வெளிநாட்டில் இருந்தோ, கிரிக்கெட் பார்த்துட்டு வரவில்லை. எனது தங்கையே போராட்டத்தில் மரணத்த முதல் பெண் போராளி, எனது தம்பி கடத்தப்பட்டு  காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். அத்துடன் என்னுடன் நெருக்கமாக இருந்த பலர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர். அதன் வலிகளை உணர்ந்தவன் நான். இதற்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகள், பிரச்சனைகளை தீர்க்க விரும்பவில்லை. அதனாலையே நான் அவர்களில் இருந்து வேறுபடுகின்றேன்.

இனிவரும் தேர்தலில் அவ்வாறன தலைமைகளுக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

நிலைமாறு கால நீதியை பெற முதலில் உண்மைகளை கண்டறியப்பட வேண்டும். அதனால் யுத்ததிற்கு காரணம் என்ன என்பதனை 1983 ஆம் ஆண்டில் இருந்து ஆராயப்பட வேண்டும்.

பிரச்சனைகள் தீர்க்கப்பட வில்லை என்றால் மீண்டும் ஆயுதம் தூக்க வேண்டி வரும் என சம்பந்தன் நேற்று கூறுகின்றார். பிரச்சனைகளுக்கு தீர்வு வந்து விட்டது என ஆயுதங்கள் கீழே வைக்கப்படவில்லை. வலோத்காரமாக ஆயுதங்களை ஏந்தினோம். வலோத்காரம் காரணமாகவே ஆயுதங்களையும் கீழே வைத்தோம்.

இனப்பிரச்சனைக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வை பெற்று இருக்க முடியும். ஆனால் பெறப்படவில்லை. நீங்கள் ஏன் தீர்க்கவில்லை என என்னிடம் கேட்கலாம். ‘விரலுக்கு ஏற்றதே வீக்கம்’ எமது கட்சிக்கு ஒரு ஆசனமே கிடைத்தது. மற்றைய தமிழ் கட்சிகளுக்கு 16 ஆசனங்கள் கிடைத்தன. ஆனாலும் நாம் தனித்து போட்டியிட்டே ஒரு ஆசனத்தை பெற்றோம். அவர்களால் அவ்வாறு தனித்து போட்டியிட முடியாதவர்களாக உள்ளனர்.

அதேவேளை அண்மையில் கிளிநொச்சியில் நடந்த போராட்டத்தில் மக்கள். எழுச்சி கொண்டதை பொறுக்க முடியாது, அதனை குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

இந்த அரசாங்கத்தை கொண்டு வந்தோம் என கூறுபவர்கள் அதனை செயற்படுத்த அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X