Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Gavitha / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் முன்னின்று, நுகேகொடை அங்காடிக்கு எதிரே நடத்திய கூட்டம், இனவாதத்தை தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்த நினைக்கும் ஒரு மிகப்பழைய முயற்சியாகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை (21) நடைபெற்ற வாராந்த ஜனநாயக இளைஞர் இணையை கலந்துரையாடலில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
'நுகேகொடையில் இருந்த கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை. இந்த நாட்டை மீண்டும் வரலாற்றை நோக்கி திருப்பி அழைத்து போகும் இந்த முயற்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பையும் சுதந்திர கட்சியையும் பிளவு படுத்துவதிலேயே போய் முடியும். தங்களை தாங்களே பிளவுபடுத்திக்கொண்டு பலவீனப்படும் வேலையை இவர்களே செய்துகொள்கிறார்கள்.
இது இந்த நாட்டில் வாழும் ஜனநாயக சக்திகளுக்கு சாதகமானது. எனவே, முடிந்து போன காட்டாட்சி மீண்டும் தலையெடுத்து விடுமோ என்று நுகேகொடை கூட்டம் குறித்து தமிழ், முஸ்லிம் மக்கள் பதட்டமடைய தேவையில்லை. இது 1950ஆம் ஆண்டுகால கட்டம் இல்லை. இன்று காலமும் உலகமும் மாறிவிட்டன. இனவாதம் பேசும் இவர்களை இவர்களே அழித்துக்கொள்வார்கள்.
எமக்கு இன்று இரண்டு கடமைகள் உள்ளன. முதலாவது, இந்த இனவாதிகளை தூண்டிவிடும் கருத்துகளை கூறுவதை தவிர்ப்பது ஆகும். அடுத்தது, எமது சொந்த அரசியல் பலத்தை ஜனநாயக ரீதியாக பலப்படுத்தி கொள்வது ஆகும். இவற்றை மனதில் கொண்டு நாம் காரியமாற்றுவோம்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிரான மக்கள் இயக்கத்தில், பத்து ஆண்டுகளுக்கு மேல் இடம்பெற்று உழைத்த எனக்கு, இன்றைய நிலவரம் பற்றி மக்களுக்கு எடுத்து கூறும் கடமை இருக்கிறது என்று நம்புகிறேன்.
நுகேகொடையில் மஹிந்தவாதிகள் நடத்திய கூட்டம் நடைபெற்ற இடம் என் இல்லத்துக்கு மிக அண்மித்ததாகும். உண்மையில் இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னரும் நடைபெற்ற வேளையிலும் அந்த பகுதியை நெருங்க அனுமதிக்கப்பட்ட தூரத்தில், அடையாளம் தெரியாத முறையில் நான் வாகனத்தில் உலா வந்து, பிரதான உரைகளை நேரடியாக கேட்டேன்.
அங்கே வந்த கூட்டம் மிகப்பெரிய கூட்டம் அல்ல. ஊடக படங்களை கண்டு மிரண்டு விட வேண்டாம். நிழல் படங்களில் ஒரு ஆயிரம் பேர் பத்து ஆயிரமாகதான் தெரிவார்கள். இது இயல்பானது. பெரும்பாலான மஹிந்தவாதிகள் அங்கு வந்தனர்.
அத்துடன் கணிசமானோர், ஒரு பரபரப்பு ஆவலுடன், என்ன நடக்கின்றது என்பதை காணவும் வந்தனர். இது போன்ற சந்தர்ப்பங்களில் வேடிக்கை பார்க்க கணிசமானோர் வருவது ஆச்சரியமானது அல்ல.
எது எப்படி இருந்தாலும் இது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஆகியவற்றின் உள்விவகாரம், இந்த கூட்டமைப்பில் அல்லது இந்த கட்சியில் ஒரு பிளவு ஏற்பட போவதை இது காட்டுகிறது. அது இந்த நாட்டின் முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு சாதகமானது.
கடந்த ஆட்சியின் போது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கிய பலர், இன்று இந்த இனவாத கூட்டில் இருப்பதை கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. ஆனால், கடந்த காலங்களில் காலத்துக்கு காலம் எமக்காக குரல் எழுப்பிய வாசுதேவ நாணயக்கார, அங்கே இருப்பதை கண்டு மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்.
அவருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கரங்கோர்க்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனும் கரங்கோர்க்க முடியும். அதையும் அவர் செய்யவில்லை. இன்று வாசுதேவ நாணயக்கார ஆடை அணிந்துக்கொண்டுதான் அரசியல் செய்கிறாரா என கேட்க விரும்புகிறேன்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தனது கட்சியில் பலமடைந்தால், அது பிரதான தளத்தில் இருக்கின்ற இருவருக்கு அரசியல் ரீதியாக மிக பாதகமானது ஆகும். அவர்கள், இன்றைய எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் ஆகும். இது இவர்களுக்கு மிக கண்டிப்பாக தெரியும்.
எனவே, இவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அரசியல் ரீதியாக எதிர்கொள்வார்கள். எனவே. மஹிந்த ராஜபக்ஷவை முன்னிறுத்தி தமது இனவாத அரசியலை முன்னெடுக்க எண்ணும் நபர்களை இந்த இருவரிடமும் ஒப்படைப்போம். வெறும் வாயை மெல்லும் இனவாத வாய்க்கு அவலை அள்ளித்தந்து விடாமல், நாம் நமது வேலைகளை பார்ப்போம். எமது கட்சிகளையும் எமது கட்சிகளின் கூட்டமைப்பு செயற்பாடுகளையும் நாம் திட்டமிட்டு ஜனநாயகரீதியாக பலப்படுத்துவோம். யார் வந்தாலும், யார் போனாலும் எமக்கு நாமே துணை என்பதை உணருவோம் என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
39 minute ago
2 hours ago