2025 மே 17, சனிக்கிழமை

சிறுவர்களுக்கெதிரான எந்த வன்முறையும் நியாயமாகாது

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்கள் மீது, குறிப்பாக அங்கவீனத்தைக் கொண்ட சிறுவர்கள் மீது, அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகள் குறித்து வேள்ட் விஷன் தனது ஆழ்ந்த கவனத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது. சிறுவர்களை மய்யமாகக் கொண்ட ஓர் அமைப்பென்ற அடிப்படையில், எச்சூழ்நிலையிலும் சிறுவர்களுக்கெதிரான வன்முறை நியாயப்படுத்தப்பட முடியாதது என்பதையும், அதிலும் குறிப்பாக சவாலான இக்காலத்தில் அதை நியாயப்படுத்த முடியாது எனவும் வேள்ட் விஷன் வலியுறுத்த விரும்புகிறது. இவ்வாறான சில வன்முறைகள் குறித்து அறிக்கையிடப்பட்டிருந்தாலும், ஏனைய சில அறிக்கையிடப்பட்டிருக்கவில்லை.

இவ்வன்முறைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த வேள்ட் விஷன் லங்காவின் சிறுவர் பாதுகாப்புக்கான தொழில்நுட்ப ஆலோசகர் கனிஷ்ட இரத்நாயக்க, “சிறுவர்களின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடு என்ற அடிப்படையில், சிறுவர்களின் அபிவிருத்தியை உறுதிப்படுத்தி, அவர்களின் வாழ்க்கையில் ஆதரவளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை எடுக்க வேண்டுமென்பதோடு, எந்தச் சிறுவரும் குறித்த வயதுக்கு முன்னதாகவே வயது வந்தவர் என அழைக்கப்படக் கூடாது.

“வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகள் மாத்திரம், சிறுவர்களுக்கெதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உதவாது. மாறாக, சூழ்நிலை என்னவாக இருந்தாலும், சிறுவர்களை வன்முறைகளற்ற வடிவில் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் பெற்றோர், ஆசிரியர்கள், பொறுப்பிலிருக்கும் ஏனையோர் உட்பட வயதுவந்த அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.

“அண்மைய சம்பவங்களின் போது, பார்வையாளர்கள் இவ்வாறான வன்முறைகளுக்கு ஆதரவளிப்பவர்களாகவோ, அதைக் கண்டுகொள்ளாமல் விடுபவர்களாகவோ உள்ளனர் என்பதை நாம் கண்டோம். சிறுவர்களின் பாதுகாப்பென்பதென்பது எம்மனைவருக்கும் தொடர்புடைய ஒன்றாகும். ஆபத்திலுள்ள சிறுவரொருவருக்கு உங்களால் உடனடியாக உதவ முடியாவிட்டால், அவருக்கு உதவியொன்றைப் பெறுவதற்காக நீங்கள் உதவுங்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

பாதிப்பான பிள்ளைப்பருவமென்பது சிறுவர்களின் நலனிலும் விருத்தியிலும் நேரடியான தாக்கத்தைக் கொண்டுள்ளது. சிறு வயதில் கொடுமையை எதிர்கொள்ளும் பிள்ளையொன்று, வளர்ந்து பெரியவரானதும், வன்முறையை ஏற்றுக்கொள்ளும் ஒருவராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமான உள்ளன. இந்நிலைமையானது நாட்டின் ஒட்டுமொத்த அபிவிருத்தியில் நேரடியாகத் தாக்கம் செலுத்துகிறது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சிறுவர்களுக்கான உதவி இலக்கமான 1929, இந்த ஊரடங்குக் காலத்தில் சிறுவர்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் அதிக எண்ணிக்கையிலான அழைப்புகளைப் பெற்றிருந்தது.

தாக்குதலொன்று தொடர்பில் பிள்ளையொன்று உங்களுக்கு அறிவித்தால் நீங்கள் எடுக்கக்கூடிய வேண்டிய ஏழு படிகளைக் கீழே காணலாம்.

ஏழு படிகள்

உங்களை நாயகன்/நாயகியாகக் கருதுவதன் காரணமாகவே அப்பிள்ளை உங்களை நாடிவருகிறது என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள்.

01. முற்சார்பு எண்ணத்துடன் பிள்ளையை அணுகாதீர்கள்

  • தாக்குதல் அல்லது வன்முறையானது பிள்ளையை உடல்ரீதியாகவும் உணர்வுரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கிறது. அத்தோடு, தம்மைப் பற்றிய சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது. உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆழ்பரிவுடன் அணுகுங்கள்.

02. அறிவுரை எதையும் வழங்க முன்னர் பிள்ளை சொல்வதைச் செவிமடுங்கள்

  • செவிமடுங்கள். இடைமறிக்காதீர்கள்.
  • அதிகமாகப் பேசுவதற்குப் பிள்ளையை ஊக்குவியுங்கள், ஆனால் கட்டாயப்படுத்தாதீர்கள்.
  • திறந்தமுனைக் கேள்விகளைக் கேளுங்கள். (உதா.: “அதைப் பற்றி இன்னும் சொல்லுங்கள்...?”)

03. பிள்ளையை நம்புங்கள்

  • பிள்ளை உங்களுக்குக் கூறும் விடயத்தை நம்புவது சிலநேரங்களில் கடினமாக இருக்கலாம். பிள்ளைக்குப் போதியளவு பக்குவம் இல்லாத காரணத்தால், குறித்த சம்பவத்தை எவ்வாறு விளக்குவது என அவருக்குத் தெரியாமலிருக்கலாம். இருந்தாலும், பிள்ளையை நம்புங்கள்.
  • உண்மையை நீங்கள் பின்னர் கண்டுபிடிக்கலாம்.

04. பிள்ளை மீது ஒருபோதும் பழிசுமத்தாதீர்கள்

  • தாக்குதல்/வன்முறையென்பது எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும் நியாயப்படுத்தப்பட முடியாததாகும்.
  • தாக்குதல் தொடர்பாகப் பிள்ளை குழப்பமடைந்திருக்கலாம், அத்தோடு வெட்கமடைந்திருக்கலாம். இந்தப் பாரத்தை இல்லாது செய்ய வேண்டிய தேவையுள்ளது.

05. பிள்ளையைப் பலப்படுத்துங்கள்

  • இவ்வாறான விடயங்களைப் பற்றி அறிவிப்பதற்கு ஏராளமான துணிச்சல் தேவைப்படுகிறது. பிள்ளை தொடர்பில் பெருமையடைவதாகச் சொல்லுங்கள். அத்தோடு, சரியான விடயத்தையே அவர் செய்தாரெனவும் வெளிப்படுத்துங்கள். இத்தருணத்தில் பிள்ளையானது பலப்படுத்தப்பட வேண்டும்.

06. பராமரிப்பாளர்களோடு கலந்துரையாட முன்னர் பிள்ளையின் ஒப்புதலைப் பெறுங்கள்

  • பிள்ளையின் பராமரிப்பாளர்கள் (பெற்றோர்ஃபாதுகாவலர், ஆசிரியர்கள், அதிகாரிகள்) பற்றிச் சிறப்பாக அறிந்திருப்பது பிள்ளையே என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, அதிகாரத்தில் இருப்போருக்குச் சம்பவம் தொடர்பில் அறிவிக்க பின்னர் பிள்ளையோடு கலந்துரையாடுங்கள்.

07. இரகசியமானதாகக் கையாளுங்கள்

  • இந்தச் செயன்முறையானது சூழ்நிலை அடிப்படையிலானது என்பதோடு, உணர்வுரீதியாகக் கவனமாகக் கையாளப்பட வேண்டியதாகும். எனவே, பிள்ளையின் சிறந்த நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாத்திரம் அறிவியுங்கள். மறுசீரமைப்பை உறுதிப்படுத்துங்கள்.
  • சம்பவத்தின் தீவிரத் தன்மையைப் பொறுத்து, அருகிலுள்ள வைத்தியசாலைக்குப் பிள்ளையைக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுங்கள். ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியுள்ள காரணத்தால், பிள்ளையின் உடைகளை மாற்றுவதையோ, பிள்ளையைக் குளிக்க வைப்பதையோ தவிருங்கள். வைத்திய அதிகாரியால் வழங்கப்படும் அறிக்கையானது நீதிமன்ற நடவடிக்கைகளின் போது முக்கியமான ஆவணமாக அமையும்.
  • பொலிஸாரிடமோ, வேறு அதிகாரிகளிடமோ முறைப்பாட்டை நீங்கள் மேற்கொண்டிருந்தால், அப்போது வழங்கப்படும் முறைப்பாட்டு இலக்கத்தைக் கவனமாக வைத்திருங்கள். முறைப்பாட்டுச் செயன்முறையை முன்கொண்டு செல்வதற்கு இவ்விலக்கம் முக்கியமானதாக அமையும்.

வேள்ட் விஷன் என்பது சிறுவர்களுடனும் குடும்பங்களுடனும் சமுதாயங்களுடனும் இணைந்து பணியாற்றி, வறுமையையும் நீதியின்மையையும் இல்லாது செய்வதற்காகப் பணியாற்றும் ஒரு கிறிஸ்தவ, உதவி, அபிவிருத்தி, பரிந்துரைபேசும் அமைப்பாகும். வேள்ட் விஷன் அமைப்பு 1977ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் செயற்பட்டு வருவதோடு, 15 மாவட்டங்களில் 34 இடங்களில் நீண்டநாள் அபிவிருத்தித் திட்டங்களில் பணியாற்றிவருகிறது. 2019ஆம் ஆண்டில் அவ்வமைப்பு, கல்வி தொடர்பாகவும் சிறுவர்கள் வாழ்வதற்கான சூழலொன்றை உருவாக்குவதற்காகச் சமுதாயங்களை ஊக்குவிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவும் கிட்டத்தட்ட 80,000 சிறுவர்களின் கல்வி தொடர்பாக நேரடியாகப் பங்களிப்பை வழங்கியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .