2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வடக்கில் 5 பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் நிலைகொண்டுள்ள நிலையிலேயே ஆசிரியர் கொலை இடம்பெற்றுள்ளது: த.தே.

Suganthini Ratnam   / 2014 மார்ச் 16 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடக்கில் 05 பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் நிலைகொண்டுள்ள நிலையிலேயே ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் கொலை இடம்பெற்றுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

மாங்குளத்தில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட ஆசிரியர் கொலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஞாயிற்றுக்கிழமை (16) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வவுனியா நேரியகுளம் மகாவித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றிய கார்த்திகேசு நிரூபன் கடந்த வருடம் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேர்தலுக்கு முதல் நாள் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்றபோது காணாமல் போயிருந்தார்.

மார்ச் 12ஆம் திகதி ஏ - 9 பிரதான வீதியில் 225ஆவது மைல்கல்லுக்கும் 226ஆவது மைல்கல்லுக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் அவரது எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளார் என்றே தடயப் பொருட்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற கணக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ளதுடன், அதற்கு மேலதிகமாக புலனாய்வுப் பிரிவினரும் மூலை முடுக்கெங்கும் குவிந்துள்ள நிலையில் நடைபெற்றுள்ளதென்றால் அரசுக்கு தெரியாத வகையில் இக்கொலை ஒருபோதும் இடம்பெற்றிருக்க முடியாது.

எனவே அதற்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் இப்படுகொலையினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இக்கொலை தொடர்பில் ஸ்ரீலங்கா அரசு நேர்மையான விசாரணைகளை இன்றுவரை மேள்கொள்ளவில்லை. எனவே இக்கொலை தொடர்பில் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றினை மேற்கொள்ள அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கொலையைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்தும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  முழுமையான ஆதரவு தெரிவிக்கின்றது.

இப்போராட்டத்தில் அனைத்து மக்களையும் பொது அமைப்புக்களையும் கலந்துகொண்டு படுகொலைக்கு நீதி கோருமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன், ஆசிரியர் நிருபனின் இழப்பால் தவித்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .