2025 ஜூலை 23, புதன்கிழமை

கடல் கொந்தளிப்பால் 147 குடும்பங்கள் இடம்பெயர்வு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 06 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன், எஸ்.கே.பிரசாத்

வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவும் கடல் கொந்தளிப்பினாலும் இதுவரையில் 147 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கரையோரப் பிரதேசங்களிலிருந்தே இக்குடும்பங்கள் வெளியேறியுள்ளன என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் குறிப்பிட்டன.

கிளிநொச்சி, கல்லாறு கிராமத்தில் வசித்து வந்த 85 குடும்பங்கள் கடல் கொந்தளிப்பு காரணமாக இன்றுஇடம்பெயர்ந்து பொது இடங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவும், கடற்கொந்தளிப்பு காரணமாகவுமே இந்தக் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. கடலிற்கு மிக அண்மையில் அமைந்துள்ள மேற்படி இக்கிராமத்தில் 651 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் கடற்கரைக்கு அண்மையிலுள்ள குடும்பங்களே இவ்வாறு இடம்பெயர்ந்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் பொது இடங்களிலும் வசித்து வருவதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடற்கரையோர கிராமங்களான கள்ளப்பாடு, கள்ளப்பாடு தெற்கு, முல்லை தெற்கு ஆகிய கிராமங்களிலிருந்து 62 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் இன்றுஇடம்பெயர்ந்துள்ளனர் என்று கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் தெரிவித்தது.

இவ்வாறு இடம்பெயர்ந்த குடும்பங்கள் கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகளை கரைத்துறைப் பற்று பிரதேச செயலகம் செய்து வருகின்றது என்று அவர் மேலம் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .