2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நாய்க்கு சாப்பாடு போடுவது போல மகனுக்கு சாப்பாடு போட்டனர்

Niroshini   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“மீசாலை இராணுவ முகாம் இராணுவத்தினர் எனது மகனைப் பிடித்து, இரண்டு கைகளையும் பின்பக்கமாக தென்னை மரத்துடன் கட்டி வைத்து, நாய்க்குச் சாப்பாடு போடுவது போல மகனின் கால்களுக்கு கீழ் சாப்பாட்டு பொதியை வைத்து நக்கிச் சாப்பிட வைத்தனர்” என இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு காணாமற்போன செல்வரட்ணம் உதயராஜ் (வயது 26) என்பவரின் தாயார் சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (26) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,

“கிளிநொச்சியிலிருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி வேலைக்காக மகன் யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். எனது மகனையும்,கஜேந்திரன், தினேஸ்குமார் என்ற இரண்டு பேரையும் சேர்த்து டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதி மீசாலை இராணுவம் பிடித்துச் சென்றது. மற்ற இருவரையும் மறுநாள், கிராமஅலுவலர் முன்னிலையில் இராணுவம் விடுதலை செய்தது. ஆனால் எனது மகனைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்தனர். எனது சகோதரி, டிசெம்பர் மாதம் 30 ஆம் திகதி மீசாலை முகாமுக்குச் சென்று எனது மகனைப் பார்த்தார்.

மகனின் இரண்டு கைகளையும் பின்பக்கமாக தென்னை மரத்துடன் கட்டி வைத்து, நாய்க்குச் சாப்பாடு போடுவது போல மகனின் கால்களுக்கு கீழ் சாப்பாட்டு பொதியை வைத்து நக்கிச் சாப்பிட வைத்திருப்பதை சகோதரி கண்டார்.

எனது மகன் பிடிக்கப்பட்டமை தொடர்பில் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு பதிவு செய்தேன். இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி எனது மகனை மீசாலை முகாமில் இருந்து வேம்பிராய் இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு மகன் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X