2025 ஜூலை 05, சனிக்கிழமை

மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவை உடன் நியமிக்கவும்

Niroshini   / 2016 ஜூன் 22 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவை உடனடியாக  நியமிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர்  இன்று புதன்கிழமை வடமாகாண சுகாதார அமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அடிப்படை தேவைகள், குறைபாடுகள், அபிவிருத்தி சம்பந்தமாகவும் நிர்வாக ரீதியாக வைத்தியசாலை நிர்வாகத்துக்கும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்குமிடையில் நிலவி வரும் சந்தேகங்கள், இடைவெளிகள் நிவர்த்தி செய்யும் பொருட்டும் மன்னார் பொதுஅமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 23ஆம் திகதி விசேட கூட்டம் ஒன்று மன்னார் பொதுவைத்தியசாலையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் தாங்களும் கலந்துகொண்டு தேவையான ஆலோசனைகள், பணிப்புரைகள் உறுதி மொழிகள் வழங்கியமையையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அக்கூட்டமானது அவசியமானதும் அவசரமானதும் என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒன்றாகும். தனிப்பட்ட பதவி நிலை அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட வைத்தியர்களுக்கு அல்லது ஊழியர்களுக்கு எதிராகவோ அல்லது குற்றம் சுமத்துவதற்காகவோ ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமாக அது நோக்கப்படவுமில்லை.

நிர்வாகத்தின் நம்பகத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதற்காகவென ஒருங்கமைக்கப்பட்ட கூட்டமேயாகும்.

அக்கூட்டத்தில், பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. குறிப்பாக மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, முழுமையான மருத்துவ பரிசோதனைகள் இன்மையால் நோயாளர்கள் அனுராதபுரம், யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுதல், ஆய்வு கூட பரிசோதகர்களின் தட்டுப்பாடு, புதிய ஆண்கள் விடுதிகள் அமைத்தல், வடிகாலமைப்புக்கள் சீர்செய்தல், தானியங்கி மின்பிறப்பாக்கிகளின் திருத்தம், உடைந்த கட்டிட கழிவுகள் அகற்றல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக நீண்ட நேரம் ஆராயப்பட்டன.

இவற்றை தீர்த்து வைப்பதற்கான வழிமுறைகள், ஏற்பாடுகள், ஆலோசனைகள் தங்களாலும் அதிகாரிகளாலும் முன்வைக்கப்பட்டன. வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் மரணங்கள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இவற்றின் முன்னேற்றம் சம்பந்தமாக கூடிப்பேசவும் தீர்வு காணவும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் அவசியம் எடுத்துக்கூறப்பட்டதற்கிணங்க, ஒரு வாரத்தினுள் அக்குழு நியமிக்கப்படும் என தங்களால் உறுதியளிக்கப்பட்டது.

உறுதியளித்து ஒரு மாத காலமாகியும் இன்னமும் அக்குழு நியமனம் செய்யப்படவில்லை. யுத்தகாலத்தில் கூட வைத்தியசாலை அபிவிருத்திக் குழுக்கள் இயங்கியமையை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தற்போது வட மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள வைத்தியசாலைகளுக்கு குறிப்பாக மாவட்ட பொதுவைத்தியசாலைகளுக்கேனும் அபிவிருத்திக்குழுக்களை நியமிப்பதில் உள்ள தடைகளையும் கால தாமதத்துக்கான காரணங்களையும் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்களை பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நீங்கள் வழங்க வேண்டும்.

சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் குறைகளை யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுக்கள் முறையாக இயங்கும் பட்சத்தில் அதனூடாக உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தி தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, நோயாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையில் அண்மைக் காலமாக ஏற்படுத்தப்பட்ட அவ நம்பிக்கைகளையும் குழப்பங்கள், துரதிஸ்டமான சம்பவங்களையும் இக்குழுவினூடாக நிவர்த்திக்க முடியும் என நம்புகின்றேன்.

குணப்படுத்துவதை விட நோய் வராமல் தடுக்க வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்கள் போல் வைத்தியசாலை குழுக்கள் அமைப்பதன் ஊடாகவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.

எனவே, நீங்கள் உறுதியளித்ததன் பிரகாரம் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுக்களை மன்னாரில் மட்டுமல்ல வடக்கின் ஏனைய மாவட்ட வைத்தியசாலைகளிலும் அமைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என நம்புகின்றேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .