2025 ஜூலை 12, சனிக்கிழமை

'வில்பத்துக் காணியை முஸ்லிம்கள் அபகரிக்கவில்லை'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 30 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஸ்.எம்.நூர்தீன்

வில்பத்துக் காணியை முஸ்லிம்கள் ஒருபோதும் அபகரிக்கவில்லை  எனக் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் சனிக்கிழமை (28) மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மறிச்சுக்கட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச்   சென்று மக்களைச் சந்தித்தனர். இதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு  அமைச்சர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்தபோது, 'வில்பத்து மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தது அல்ல. வில்பத்து என்பது இந்த நாட்டிலுள்ள வன ஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமான பாரிய காடாகும்.

இந்த வில்பத்தானது அநுராதபுர மாவட்டத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் வரும் ஒரு பகுதியாகும். இது மன்னாரைச் சேந்தது அல்ல. மன்னாரையும் புத்தளத்தையும் பிரிக்கின்ற எல்லையே வில்பத்தாகும்.

இந்த எல்லையிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கு அப்பால்; முஸ்லிம் கிராமங்களும் கத்தோலிக்க கிராமமும் அமைந்திருக்கின்றன' என்றார்.  

'இந்தக் கிராமங்களில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்தபோது, அந்த மக்களுடைய ஆயிரம் ஏக்கர் காணியை பாதுகாப்புப் படையினர் தங்களது இருப்புக்காக எடுத்துக் கொண்டதால், சில புதிய கிராமங்களை பாதையோரங்களில் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தத் தேவையை நானோ அல்லது என்னுடைய மக்களோ செய்யவும் இல்லை, பலவந்தமாகக்  குடியேறவும் இல்லை.

மேலும்,  முசலிப் பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேறியிருக்கின்ற முஸ்லிம்கள், வன ஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகளிலோ அல்லது வணபரிபாலனத்துக்குச் சொந்தமான காணிகளிலோ மீள்குடியேறவில்லை' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .