2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

விவசாய அபிவிருத்திக்கு இராணுவம் இடையூறு: ஐங்கரநேசன்

Menaka Mookandi   / 2014 மார்ச் 06 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான முத்தையன்கட்டுக் குளத்தின் அலைகரையைச் சேர்ந்த 35 ஏக்கர் பரப்பளவுள்ள குள ஒதுக்கீட்டுக் காணியை இராணுவம் ஆக்கிரமித்து கட்டிடங்களையும் பண்ணைகளையும் நிறுவியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாய அபிவிருத்தி பாதிக்கப்படுவதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், முத்தையன்கட்டு, தட்டையன் மலைப்பகுதியில் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் வயல் விழா நிகழ்வுகள் நேற்று (04) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே விவசாய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், முத்தையன்கட்டுக்குளம் இலங்கையின் பிரசித்தி பெற்ற நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டாவது பெரிய குளமாகவும் உள்ளது.

1965ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இந்தக் குளத்தை நம்பி வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் குடியேற்றப்பட்டார்கள். வறுமையோடு குடியேறியவர்கள் முத்தையன்கட்டுக் குளத்தில் ஏற்று நீர்ப்பாசனத்தின் கீழ் உப உணவுச் செய்கையில் ஈடுபட்டு விரைவிலேயே பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைந்தார்கள்.

ஆனால், நடந்து முடிந்த போர் முத்தையன்கட்டு விவசாயிகளை வறுமையின் குழிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. ஏறத்தாழ எல்லா விவசாயிகளும் வங்கிகளில் கடன் பெற்று அதனைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

போர் முடிந்து ஐந்து ஆண்டுகளை எட்டியுள்ள நிலையிலும் விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. இந்த நிலை நீடிப்பதற்கு அனுமதிக்க முடியாது. அந்த வகையிலேயே, மனவிரக்தியுற்றிருக்கும் எமது விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில், அவர்களுக்குப் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில், பொருத்தமான நல்லினப் பயிர்களை அறிமுகம் செய்யும் நோக்கில் அவர்களது வயல் நிலங்களுக்கே சென்று வயல் விழாவைக் கொண்டாடி வருகிறோம் என்றார்.

காலநிலை மாற்றங்களினால் மழை பொய்த்து, கிணறுகளிலும் குளங்களிலும் தண்ணீரின் அளவு குறைந்து வரும் நிலையில், விவசாயத்தில் குறைந்தளவு தண்ணீரைப் பயன்படுத்தி கூடிய விளைச்சலை அறுவடை செய்யும் பாசன முறைகளை அறிமுகப்படுத்துவது அவசியம்.

இப்போது முத்தையன்கட்டில் தூவல் நீர்ப்பாசனத்தில் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட மிளகாய், வெங்காயச் செய்கை வெற்றியளித்திருக்கிறது. தண்ணீர் மிச்சப்படுத்தப்பட்டது மாத்திரம் அல்லாமல், தூவல் நீர்ப்பாசனம் செய்யப்பட்ட பயிர்களில் நோய்களின் தாக்கமும் பீடைகளின் தாக்கமும் குறைவடைந்தும் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முத்தையன்கட்டுப் பிரதேச விவசாயத்தின் எதிர்காலம் மாத்திரமல்ல, இப்பிரதேச மக்களின் வாழ்வும் முத்தையன்கட்டுக் குளத்துடனேயே பின்னிப்பிணைந்துள்ளது. குளத்தில் நீர் தேங்கினால்தான் கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும். நீண்ட காலமாகப் பழுதுபார்க்கப்படாமல் இருக்கும் முத்தையன்கட்டுக் குளத்தைப் புனரமைத்து அதிக நீரைத் தேக்குவது அவசியம்.

இதற்குத் தடையாக இராமல், நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான அலுவலகங்களிலும் விடுதிகளிலும் நிலைகொண்டுள்ள படையினரும், குளக்கரையை ஆக்கிரமித்துப் பண்ணை அமைத்திருக்கும் படையினரும் அவற்றை எங்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான வீ.கனகசுந்தரசுவாமி, து.ரவிகரன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், முல்லைத்தீவு மாவட்டப் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந.ஸ்ரீஸ்கந்தராசா, விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .