2025 ஜூலை 14, திங்கட்கிழமை

காணாமற்போனர் தொடர்பில் பாப்பரசருக்கு மகஜர்

Thipaan   / 2015 ஜனவரி 17 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விசாரணை செய்வதற்கு சர்வதேச தரத்திலான சட்ட ரீதியான ஒரு பொறி முறையை உருவாக்க இலங்கை அரசுக்;கு அழுத்தம் கொடுக்க கோரி,  வடக்கு, கிழக்கு மாகாண காணாமற்போன  உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கம் திருத்தந்தை பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

இலங்கைக்கு வருகை தந்த பரிசுத்த பாப்பரசர் கடந்த புதன்கிழமை(14) மாலை; விசேட வானூர்தி மூலம் மன்னார் மடு திருத்தலத்தை வந்தடைந்தார்.

இந்த நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என பலதரப்பட்டவர்களும் மடுத்திருத்தலத்துக்கு வருகை தந்திருந்த போதே பாப்பரசரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

எம் அன்பான திருத்தந்தை அவர்களே! தங்களின் இலங்கைக்கும் மன்னார் மறைமாவட்டத்தின் மடு திருத்தலத்துக்குமான அருள் நிறை தரிசிப்புக்;கு, நாங்கள் உளம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இது உண்மையிலே ஒரு வரலாற்று நிகழ்வு.
மன்னாரிலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கடந்த யுத்தகாலங்களில் ஏராளமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

இப்பிரச்சினையானது, நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஒன்றாக இருந்து வருகின்றது. இதனை காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள், உறவுகள் ஆகிய நாங்கள் தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

இலங்கையின்; காணாமல் ஆக்கப்படுதல் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் (யு.என்) 1999ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வுகளின் படி காணாமல் ஆக்கப்பட்டோர் தொகை உலகில் 2ஆம் நிலையில் உள்ளது.

தடுப்பு முகாம்களிலிருந்தும் இலங்கை இராணுவத்தினரால்; தடுத்து வைக்கப்பட்டிருந்த பன்னிரெண்டாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

இது வடக்கு, கிழக்கின் யுத்த விஸ்தரிப்பின்போது மேலும் அதிகரித்தது. இது 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுகளில் யுத்தம் தீவிரமடைந்த நாட்களில் எண்ணிக்கையில் அடங்காத அளவு பயங்கரமாக அதிகரித்தது.

யுத்தத்தின் இறுதிப்பகுதியில் 2009ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் அதிகமான மக்கள் படையினரிடம் சரணடைந்தார்கள்.
இன்னும் பலர் படையினரால் கட்டாயப்படுத்தி இழுத்துச் செல்லப்பட்டார்கள்.


இவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளார்கள். அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்; அவர்கள், நூற்றுக்கணக்கிலான விடுதலைப் புலிகளோடு இராணுவத்தினரிடம் சரணடைந்தார். இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது இன்றுவரை தெரியவில்லை.

இது தவிர போர் பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் செல்ல முயன்ற பலரும் அரச படையினராலும் துணைப்படையினராலும் கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டவர்களும் இவற்றுள் அடங்குவர்.

காணாமல் ஆக்கப்படுவதற்கும் கடத்தலுக்கும் இலங்கை இராணுவத்துக்கு எந்த தொடர்பும் இல்லை என இலங்கை அரசு கூறுகின்றது.
இலங்கையினதும் சர்வதேசத்தினதும் மனித உரிமை நிறுவனங்கள் அழுத்தங்களை கொடுத்தாலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு, (யு.என்.எச்.சி.ஆர்.) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவற்றின் சிபாரிசை அமுல்படுத்தும்படி வலியுறுத்தியும் அரச தரப்பிலோ, சட்ட ரீதியாகவோ, எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இலங்கையின்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'காணாமற்போன உறவுகளைத் தேடும் ஜனாதிபதி  ஆணைக்குழு' ஒன்றை நியமித்தார்.

இவ்வாணைக்குழுவுக்கு 1983ஆம் ஆண்டு தை, 1ஆம் திகதி முதல், 2009ம் ஆண்டு வைகாசி 19ஆம் திகதி வரையிலான காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களை திரட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழு, 20,106 முறைப்பாடுகளைப் பெற்றுக்கொண்டது.

அவற்றில் 5,000 முறைப்பாடுகள் காணாமல் ஆக்கப்பட்ட பாதுகாப்பு படையினரதாகும்.

ஆனால், உள்ளூர் மனித உரிமை நிறுவனங்களின் தரவுகள் முன்னையதைவிட மிக அதிகமாக இருந்தது. பலர் தாங்கள் பழிவாங்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சாட்சியம் அளிக்க முன்வரவில்லை.

இவ் ஆணைக்குழு, அதற்கு  சமூகமளித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினரால் விமர்சிக்கப்பட்டது.  சமூக குழுக்களின் பார்வையாளர்கள் இவ்வாணைக்குழுவின் பிரச்சினைகளை தவிர்க்க முயற்சிக்கின்றது.

நட்ட ஈடுகளை வழங்குவதை ஊக்குவிக்கின்றது என குறிப்பிட்டனர்.

இவ்வாணைக்குழுக்களின் விசாரணைகளை நடத்திக் கெண்டிருந்தவேளை, அரசின் மற்றுமொரு அழுத்தம் இவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்கி ஆணைக்குழுக்களில் தேங்கிக் கிடக்கும் கோவைகளின்  எண்ணிக்கைகளைக் குறைத்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களினால் அரசாங்கத்துக்கு ஏற்படும் அழுத்தங்களை குறைக்க முயற்சிக்கின்றது.

அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட உள்ளூர் ஆணைக்குழுக்கள் எதுவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த தீர்வையும் வழங்கத் தவறியதால், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான ஒரு பக்கச் சார்பற்ற தீர்வை வழங்குவதற்கு சர்வதேசத்தின் தலையீட்டை காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக எதிர்பார்க்கின்றார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆரம்ப தரவுகளின்படி 3,302 நபர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்படுகின்றன. இவை மன்னார் பிரஜைகள் குழுவினால் பெறப்பட்ட தரவுகள்.

இவை ஜனாதிபதி ஆணைக்குழுவிலும், பதிவுசெய்யப்பட்டுள்ளன. பரிசுத்த தந்தை அவர்களே, துயரப்படும் நாங்கள் இத்துயரத்திலிருந்து விடுபட்டு ஆறுதல் பெறவும் தாங்கள் பெரும் மனதுடன் உதவவும், அதற்கான அழுத்தத்தை  இலங்கை அரசுக்கு வழங்கவும் உலக அரங்கில் இதை முன்னிலைப்படுத்தி எமக்கு எமது உறவுகளை மீளப்பெற்றுத் தர பெருமனதுடன் உதவவும் வேண்டும் என விநயமாக கேட்டுக்கொள்கின்றோம் என அந்த மகஜரில் குறிப்பிடப்பபட்டிருந்தது.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .