2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'இடம்பெயர்ந்து மீள்குடியேறியோருக்கு வீடுகள் இல்லை'

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

இடம்பெயர்ந்து மீள்குடியேறியோருக்கு சரியான முறையில் வீடுகள் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வன்னி  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்  தெரிவித்தார்.

வன்னி குறொஸ் சுகாதார நிறுவனத்தின் அனுசரணையுடன் பசி ஒழிப்புக்கான உலகமன்றம் என்ற தொண்டு நிறுவனத்தால் மாற்றுவலுவுள்ளவர்களுக்கான அரிசி பொதிகள் வழங்கும் நிகழ்வு  சனிக்கிழமை (7) நடைபெற்றது. இங்கு  உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'யுத்தத்தினால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கனகராயன்குளம் பிரதேசமும் ஒன்று. இங்கு 500க்கும் மேற்பட்டவர்கள் விசேட தேவைக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றார்கள். சில கிராம சேவையாளர் பிரிவில் 100க்கும் அதிகமானவர்கள் இவ்வாறு அவயவங்களை இழந்தவர்களாக காணப்படுகின்றார்கள். யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களாகப்; போகின்றன.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அவசர தேவைகளை பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியிருந்தோம். ஆயினும், அது நிறைவேறவில்லை.

இடம்பெயர்ந்து சென்று திரும்பிவந்து மீள்குடியேறிய குடும்பங்களுக்கு சரியான வீடுகளில்லை. வீதிகள் இல்லை. மின்சாரம் இல்லை. இந்தக் குடும்பங்களை சேர்ந்த எண்ணற்ற பிள்ளைகள் தமது கல்வியை இடையில் நிறுத்திக்கொண்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்டுள்ள இந்தக் குடும்பங்களுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு முயற்சித்தோம். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அது முடியவில்லை. சீரான முறையில் இந்தப் பணிகள் நடைபெறவில்லை.இதன் காரணமாக நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தி மைத்திரிபால சிறிசேனவை புதிய ஜனாதிபதி ஆக்கினார்கள்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள புதிய அரசாங்கம், தமிழ் மக்களுக்கான பல விடயங்களை நிறைவேற்றவேண்டி உள்ளது.  அதனை நினைவூட்டுவதற்காகவே, காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிலளிக்கவேண்டும் எனக் கோரி வடக்கு, கிழக்கு பகுதியெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

வடக்கில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாக உள்ளார்கள்.  இதனால் எண்ணற்ற குடும்பங்கள் பெண்; தலைமைத்துவ   குடும்பங்களாக இருக்கின்றன. இந்தப் பிரதேசத்தில் 12 ஆயிரம் சிறுவர்கள் தாய், தந்தையரை அல்லது தாயையோ, தந்தையோ இழந்தவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் நிலையான வாழ்வாதாரமற்ற குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல், அரசியல் கைதிகளாக பலர் இன்னும் சிறைச்சாலைகளில் வாடுகின்றார்கள். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயிருக்கின்றார்கள். அவர்கள் எங்கு இருக்கின்றார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் இருக்கின்றது.

இராணுவம் காணிகளை ஆக்கிரமித்திருப்பதனால், பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய பிரச்சினைகளுக்கு அப்பால் தேசிய இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணவேண்டிய முக்கிய பொறுப்பும் அரசாங்கத்ததை சார்ந்திருக்கின்றது.

புதிய அராசங்கம் முன்னெடுத்துள்ள 100 நாள் வேலைத்திட்டத்தில் இவற்றில் அவசரமாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என கோரியிருக்கின்றோம்.

பத்து வருடங்கள் அதிகார பலத்தோடு அசைக்கவே முடியாது என்ற நிலையில் ஆட்சி புரிந்த முன்னைய அரசாங்கத்தை புரட்சிகரமான வாக்களிப்பின் மூலம் தமிழ் மக்கள் தோற்கடித்திருக்கின்றார்கள். சர்வதேச நாடுகள் பலவற்றின் உதவியோடு முன்னைய அரசாங்கம் யுத்தத்தில் வெற்றி பெற்றிருந்தது. முன்னைய அரசு 20 நாடுகளிடம் இருந்து பெற்ற ஆயுதங்கள் மற்றும் பண உதவிகளைக் கொண்டே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால், யுத்தம் முடிவடைந்த பின்னர் யுத்தத்தினால் அழிவுற்ற பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்காக வெளிநாடுகள் அளித்த உதவிகளைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முன்னைய அரசு வழங்கவில்லை. இத்தகைய ஒரு பின்னணியில்தான் அந்த அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியது.

தேர்தலின் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்தே, இலங்கையின் 67ஆவது சுதந்திர தின வைபவத்தில் மைத்திரிபால சிறிசேனா புதிய ஜனாதிபதியாக பங்கேற்க முடிந்திருக்கின்றது. தமிழ் மக்களின் ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசாங்கம் 6 வருடம் தொடக்கம் 20 வருடங்கள் வரையில் சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் இளைஞர்களைப் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும். அவயவங்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக சமூகத்தில் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தி;ற்காக இந்த அரசு நிதிக் கொடுப்பனவு செய்ய முன்வர வேண்டும்.

புதிய அரசாங்கத்திற்குத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவசரமாகச் செய்ய வேண்டியவை என்ன என்பதை நாங்கள் தெரியப்படுத்தியுள்ளோம். அந்த விடயங்கள் தொடர்பில் புதிய அரசாங்கத்திற்கு நினைவூட்டும் வகையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, இந்த அரசாங்கம் இது தொடர்பில் என்ன செய்யப் போகின்றது என்பதை நாங்கள் நிதானத்துடனும், பொறுமையோடும் பார்த்திருக்கின்றோம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எம் மக்களுக்கு புலம்பெயர்ந்துள்ள எமது உறவுகளும் பல உதவிகளைச் செய்து வருகின்றார்கள். இவ்வாறான உதவிகள் பல்வேறு தேவைகளைக் கொண்டுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமானதல்ல. இத்தகைய உதவிகளைச் சுட்டிக்காட்டுவதன் ஊடாக எமது மக்களின் பாரிய தேவைகளையும், அவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் புதிய அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம்' என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .