2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மாந்தை கிழக்கின் சில கிராமங்கள் அரச அதிகாரிகளால் புறக்கணிப்பு: ம.தயாநந்தன்

Menaka Mookandi   / 2015 மார்ச் 11 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒருசில கிராமங்கள் அரச அதிகாரிகளினால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மகாலிங்கம் தயாநந்தன் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

'மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கிடாப்பிடித்த குளம், பனங்காமம், பாலப்பானி, நட்டான்கண்டல், சிராட்டிக்குளம் ஆகிய கிராமங்களும் அந்தக் கிராம மக்களும் ஒருசில அரச திணைக்களங்களின் உயரதிகாரிகளினால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள். இது தொடர்பில் அக்கிராமங்களின் மக்கள் பலர் என்னிடம் முறையிட்டு வருகின்றனர்.

அரசாங்க திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்கள், அரசியல் ரீதியாக செயற்படக்கூடாது. ஆனால், இந்தப் பிரதேசங்களில் உள்ள அரச திணைக்களங்களில் வித்தியாசமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. அண்மையில் நடந்த சம்பவமொன்று உதாரணமாக எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

ஒரு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர,  தமது கிராம அபிவிருத்தி தொடர்பில் அரச அலுவலகமொன்றுக்குச் சென்றபோது நீங்கள் யாருடைய ஆட்கள் என அந்த அலுவலகத்தில் இருந்த உயரதிகாரி வினவியுள்ளார். இது கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். இது போலவே மேற்குறித்த கிராம மக்கள், வீட்டுத்திட்டத்தில் ஆரம்பித்து வீதி, மின்சாரம், குளம் என சகல விடயங்களிலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள்.

அரச அலுவலகங்களில் எவ்வாறு அரசியல் பேச முடியும் என கேட்க விரும்புகிறேன். அடிமட்ட மக்களுக்கு கடமையாற்றுவதற்கே அரச அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். இதனை மீறினால் அதிகார துஷ்பிரயோகமாகவே பார்க்க வேண்டும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடு நல்லாட்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அரச அலுவலகங்களில் இவ்வாறு அரசியல் ரீதியாக பழிவாங்குவதென்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இது விடயத்தில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .