2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ஷெல் துண்டுகளுடன் திரியும் மாணவர்களின் விபரங்களை திரட்ட பிரதமர் உத்தரவு

Menaka Mookandi   / 2015 மார்ச் 30 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஷெல் துண்டுகள் உடம்பில் துளைத்த நிலையில் அவற்றை இதுவரையில் அகற்றாதுள்ள முல்லைத்தீவு மாணவர்களின் விபரங்களை சேகரிக்குமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரச அதிகாரிகள், அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை (29), மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, அங்கு உரையாற்றிய சிவில் அமைப்பொன்றின் பிரதிநிதியொருவர், 'முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் உடம்பில் ஷெல் துண்டுகளைத்  தாங்கியவாறு வாழ்ந்து வருகின்றனர்' எனக் கூறினார். அவரது கருத்தை அவதானித்த பிரதமர், மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், வறிய குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள் ஆகியவற்றின் விபரங்களைத் திரட்டுமாறும் பிரதமர் உத்தரவிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் விக்ப்ரமசிங்க, 'யுத்தத்தின்போது உளரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு உளநல வைத்தியர்கள் 300பேரின் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை இந்தியாவிடம் கோரியுள்ளோம். இந்த நடவடிக்கையில் இராணுவ வைத்தியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்' என்றார்.

இதேவேளை, முல்லைத்தீவு வனஜீவராசி பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான காணிகள், கடந்த 30 வருடங்களாக திணைக்களத்திடம் கையளிக்கப்படாமல் பொலிஸாரிடம் இருப்பதாக பிரதமரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிரதமர், இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யுமாறு கூறினார்.

அத்துடன், வெலிஓயா பிரதேசத்திலுள்ள தமிழ் மக்களின் விவசாய காணிகள், மகாவலித் திட்டத்துக்கு என சுவீகரிக்கப்பட்டு தற்போது அங்கு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர் என்று சிவில் சமூக பிரதிதியொருவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த முல்லைத்தீவு மாவட்டத்தில் 5,800 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரிடம் இருப்பதாகவும் அவற்றில் 777 ஏக்கர் காணிகள் மாத்திரமே தனியாருடைய காணிகள் எனவும் பிரதமர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .