2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சமுர்த்தி பயனாளிகள் தெரிவில் அரசியல் இல்லை: பிரதேச செயலாளர்

George   / 2015 ஜூன் 10 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குள் அடங்கும் கிராமங்களில் சமுர்த்தி பயனாளிகள் தெரிவில் எவ்வித அரசியல் பாரபட்சமோ, பாகுபாடோ கிடையாது. விதிமுறைகளுக்கு அமைவாக நியாயமான முறையில் சமுர்த்தி உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இது தொடர்பில் பத்திரிகைகளில் வெளிவந்த குற்றச்சாட்டை முற்றாக மறுகின்றேன் என கண்டாவளை பிரதேச செயலாளர் த.முகுந்தன், செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார். 

சமுர்த்தி பயனாளிகள் மீளாய்வின் போது ஒரு அரசியல் கட்சி சார்ந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் மக்கள் முறையிட்டதாக பத்திரிகையில் வெளிவந்த செய்தி தொடர்பில் வினாவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் பிரதேச செயலர் மேலும் கூறுகையில், தற்போது சமுர்த்தி பயனாளிகளாக இருப்பவர்கள், மீள்குடியேற்றத்தின் பின்னர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படாத காலத்தில் கிராம அலுவலர்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்வர்கள். இவர்கள் கடந்த மூன்று வருடங்களாக சமுர்த்தி பயனை பெற்று வருகின்றனர். தற்போது சமுர்த்தி பயனாளிகள் மீளாய்வு செய்யப்படுகின்றனர்.

சமுர்த்தி என்பது ஒரு வறுமை ஒழிப்புத்திட்டம். எனவே தொடர்ந்தும் ஒரு நபர் சமுர்த்தி பயனாளியாக இருக்க முடியாது. கடந்த மூன்றாண்டுகளில் சமுர்த்தி பயனாளி ஒருவரின் வருமானம் உயர்வடைந்திருக்கலாம். எனவே அவ்வாறானவர்கள் நீக்கப்பட்டு வறுமைக்குள்ளான புதிய ஒருவர் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கும் மற்றும் நிரந்தர வருமானம் பெறுபவர்கள், சொந்த வியாபாரம் செய்பவர்கள், வருமானம் ஈட்டக்கூடிய வாகனம் வைத்திருப்பவர்கள், புதிதாக அரச சேவையில் இணைந்து கொண்டவர்கள், சமுர்த்திப் பயனாளிகளிலிருந்து நீக்கப்படுகின்றனர். இது சமுர்த்தி திட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைவானது.

சமுர்த்தி  பயனாளிகள் தெரிவின் போது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராமஅலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவைகள் உத்தியோகத்தர், கிராமமக்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றலுடன் மீளாய்வு செய்யப்படுகிறது. 

இதன்போது எவ்வித பாகுபாடோ, பாரபட்சமோ காட்டப்படமாட்டாது. விதிமுறைகளுக்கு அமைவாகவே தெரிவுகள் இடம்பெறும். குறிப்பாக ஒரு நபர் எந்த அரசியல் கட்சி சார்ந்தவர் என்பது எங்களுக்கு தெரியாது. மீள்குடியேற்றத்தின் பின்னரான கடந்த ஐந்து வருடங்களாக பிரதேச செயலராக கடமையாற்றி வருகின்றேன்.

எனக்கு எந்த அரசியல் கட்சி சார்ந்தவர்களும் எச்சந்தர்ப்பதிலும் எந்த மக்கள் நலத்திட்டங்களிலும் சிபார்சுகளை மேற்கொண்டது கிடையாது. நாங்கள் நியாயமாகவே செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். பயன்கள் கிடைத்த மக்கள் பாராட்டுவதும், கிடைக்காதவர்கள் விமர்சிப்பதும் வழமையானது. ஆதரமற்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாக பிரதேச செயலாளர் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X