2025 ஜூன் 07, சனிக்கிழமை

‘அரசியல் கைதிகளை விடுதலை செய்தாலே அரசியல் தீர்வு கிட்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 29 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

அரசியல் கைதிகளை சிறையில் வைத்துக் கொண்டு அரசியல் தீர்வை எட்டவே முடியாது. மண்டேலாவின் விடுதலையே ஆபிரிக்காவில் நல்லிணக்கம் ஏற்பட வழிவகுத்தது.  எனவே, தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையே, அரசியல் தீர்வுக்கான வாசலை திறக்கும் என, சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“யுத்தம் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும், யுத்தகால வன்முறை அரசியற்சூழலுக்கான காரணங்கள் இல்லாதொழிந்த பிறகும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசாங்கம் நீக்காமல் நீடிப்பது மக்களின் மீதும் சுதந்திரமான அரசியல் உணர்வின் மீதும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும்.

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் அரசியல் கைதிகள் நீதியற்ற முறையில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இது வெளிப்படையான நீதிமறுப்புச் செயற்பாடாகும். இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாதிருப்பது கண்டனத்துக்குரியது, கவலைக்குரியது என்று சர்வதேச சமூகம் பகிரங்கமாகவே தெரிவித்திருக்கும் சூழலில், அதைத் தொடரும் அரசாங்கத்தின் நடவடிக்கை கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

“அரசியல் கைதிகளின் விடுதலையும் காணாமலாக்கப்பட்டோரின் விவகாரத்துக்கான தீர்வும் முக்கியமானவை. ஆனால், அரசாங்கம் இதிலே பொறுப்பாக நடந்து கொள்ளாமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

“இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு தென்னாபிரிக்க முன்னுதாரணங்களை வலியுறுத்தும் அரசாங்கம், அங்கே நெல்சன் மண்டேலாவின் விடுதலையே அதைச் சாத்தியப்படுத்துவதற்கான தொடக்கப்புள்ளியாக இருந்தது என்பதை மறந்து விட்டது. மண்டேலாவின் சிறைக்கதவுகள் திறக்கப்பட்டபோதே தென்னாபிரிக்காவின் தீர்வு சாத்தியமானது என்ற உண்மைக்கு அமைய, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையே இலங்கையின் அமைதித்தீர்வுக்கான வாசலைத் திறக்கும் எனப் புரந்து கொண்டு இவர்களுடைய விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டும்.

“இதன் மூலம் பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கான ஆறுதலை வழங்கி, பகை மறப்புக்கும் புரிந்துணர்வுக்குமான ஏதுநிலைகளை உருவாக்க வேண்டும்.

“இனியும் காலத்தை இழுத்தடித்து, முரண்நிலைகளையும் பகை வளர்ப்பையும் செய்து, நாட்டின் எதிர்காலத்தைப் பாழடிக்காமல், உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

“அரசியல் கைதிகளை சிறையில் வைத்துக் கொண்டு அரசியல் தீர்வை ஒரு போதுமே எட்ட முடியாது. அரசியல் கைதிகள் உள்ள நாட்டில் அரசியல் சுதந்திரம் எவருக்கும் கிடையாது. ஆகவே, இந்தக் கைதிகளின் விடுதலையை உடனடியாகச் சாத்தியப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .