2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக தீர்மானம்

Freelancer   / 2022 நவம்பர் 24 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

பாரம்பரிய தொழில் பாதிக்காதவாறு, கடலட்டை பண்ணைகள் அமைப்பதற்கான துறைசார் ஆய்வுகளை மேற்கொண்டு, சட்டவிரோத கடலட்டை பண்ணைகளை அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பூநகரி பிரதேச சபையில் தீர்மானம் திங்கட்கிழமை (21) நிறைவேற்றப்பட்டது.  

பூநகரி பிரதேச சபையின் அமர்வு, சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமாகிய போது, கடலட்டை பண்ணைகள் தொடர்பான தீர்மானத்தை சபையின் தவிசாளர் தனது தனிப்பிரேரணையாகக்கொண்டு, ஏக மனதாக நிறைவேற்றுமாறு பிரேரணையை வாசித்து சபையைக் கேட்டுக்கொண்டார். 

பூநகரியின் மேற்கு கடலின், பெரும்பாலான பகுதிகளில் கடலட்டை பண்ணைகள் காணப்படுகின்றன.  யார் என்று இங்குள்ளவர்களுக்குத் தெரியாதவர்களுக்கு ஏக்கர் கணக்கில் வழங்கப்படுகிறது. சட்டவிரோதமாக வழங்கப்படுகிறது.  இதனால் பாரம்பரிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களாகிய நாம், எங்களுக்கான காணி உரிமைக்காக பேராடிக்கொண்டிருக்கும் வேளையில், சந்ததிகளாக வாழ்வாதாரத்துக்கு கடலை மட்டும் நம்பியிருக்கும் மக்களை, கடலில் இருந்து அந்நியப்படுத்தி எங்கள் கடலை, கடலட்டை பண்ணை என்ற போர்வையில் சீனாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாரைவார்க்கும் சதியை பூநகரி பிரதேச சபை வன்மையாக கண்டிக்கிறது. 

கடலட்டை பண்ணைகளின் தீமை பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு முடிவு வரும் வரையும் சட்டவிரோத கடலட்டை பண்ணைகளை அகற்றுமாறு அரசாங்கத்தை கோருகின்றோம் என்றார். 

இரண்டு உறுப்பினர்கள் குறித்த தீர்மானத்துக்கு எதிராக காணப்பட்ட நிலையில் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .