Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 01 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாகம் கபிலன்
“தமிழ் அரசியல் கைதிகள் விடயம், அரசியல் காரணங்களுக்காகவே தீர்வு காணப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது” என, வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
மேலும், “வகுப்புகளைப் புறக்கணித்து அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வந்த மாணவர்களை, பல்கலைக்கழகத்துக்குப் பூட்டுப் போட்டு முடக்கும் நிலைக்குத் தள்ளியது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைவிரிப்பே” எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில், அவர் இன்று (01) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தாம் சார்ந்த சமூதாய நோக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவளிப்பது பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவரதும் தார்மீகக் கடமையாகும். மாணவர்கள் மேற்கொண்டு வரும் இப்போராட்டமானது பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிரான போராட்டம் அல்ல என்பதையும் தாம் சார்ந்த சமூகத்தின் மீதான அக்கறையில் நடாத்தப்பட்டு வருகிறதென்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
“அமைதியான வழியில் போராடிய மாணவர்களைப் 'பிரச்சினைக்குப் பேசித்தீர்வு காணலாம்' என்று கூறி அழைத்துப் பேசிய ஜனாதிபதி, மாணவர்களிடத்தே வழங்கியிருந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டமையே மாணவர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வழிசமைத்துள்ளது.
“சந்திப்பு முடித்து நீங்கள் யாழ்ப்பாணம் செல்வதற்குள்ளே தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லதொரு தீர்வை முன்வைப்பதாகப் பேச்சு மேசையில் வைத்து ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதியானது, நிறைவேற்றப்படாது ஒரு சில நாட்கள் கழித்து, கடந்த புதன்கிழமை வரை அவகாசம் கோரப்பட்டிருந்தது. புதனும் வந்தது வாக்குறுதி வெள்ளிக்கிழமைக்குத் தள்ளிப்போனது.
“சில மணித்தியாலங்களில் ஆரம்பித்து புதன் என்றும் பின் வெள்ளி என்றும் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. இதுவரை வகுப்புப் புறக்கணிப்புடன் வரையறுத்து நம்பிக்கையுடன் பொறுமைகாத்திருந்தே இருந்தார்கள். இந்நிலையில்தான் அரசியல் கைதிகள் விடயத்தில் தம்மால் எதுவும் செய்ய முடியாதென்று அரசாங்கத் தரப்பின் சார்பில் அமைச்சர் சுவாமிநாதன், மாணவர் தரப்பிடம் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளார். அதன் பின்னரே வேறு வழியின்றி போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் முடிவுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டார்கள்.
“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான அச்சுறுத்தல் நிலையில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிக்குப் புறம்பான முறையில் வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி பல ஆண்டுகளாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதானது, இலங்கை அரசாங்கத்தின் தமிழர்கள் மீதான அடக்குமுறையின் வெளிப்பாடாகும்.
“தமிழர்களை எந்தவகையிலேனும் அடக்கியாண்டு வருவதன் மூலம் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளைக் குதூகலப்படுத்தி தமது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதென்ற கடந்த கால ஆட்சியாளர்கள் பயணித்து வந்த இனவாத வழியிலேயே நல்லாட்சி அரசாங்கமும் பயணித்து வருகிறது. அதன் அண்மித்த சாட்சியாகவே தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு அமைந்துள்ளது.
“தேரை இழுத்துத் தெருவில் விட்ட கதையாக அரசியல் கைதிகள் விடயமும் ஆகிவிடக்கூடாதென்றால் ஒன்றுபட்ட மாபெரும் சக்தியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியுடன் நின்றால் மட்டுமே, தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லதொரு தீர்வினைக் காண முடியும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago