2025 மே 16, வெள்ளிக்கிழமை

‘சந்தர்ப்பங்களை தவறவிட்டப் பின்னர் ஆசனங்களைக் கேட்கின்றனர்’

Editorial   / 2020 ஜூலை 21 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

சர்வதேசத்துடன் பேசுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் தவறவிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மீண்டும் 20 ஆசனங்களைக் கேட்பதாக, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், போர் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில், போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லையென்றார்.

வடக்கு மாகாணமானது, நீண்டகாலமாக அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், எனவே அவற்றைப் பூர்த்திசெய்வதற்கு, வடமாகாண சபைக்குப் பூரண அதிகாரங்களை வழங்க வேண்டுமெனவும் கூறினார்.

அத்துடன், வடபகுதிக்கு விசேடமான நிதி ஒதுக்கீட்டைச் செய்யவேண்டிய தேவையும் இந்த அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் எனவே, இவற்றைச் செய்விப்பதற்கு ஓர் உறுதியான தலைமைத்துவம் தமிழர்களுக்கு வேண்டுமெனவும், சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக, சர்வதேசத்துடன் பேசுவதற்கு 20 ஆசனங்களை மக்கள் வழங்க வேண்டுமென்று, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறுகின்றார். ஏற்கெனவே மக்கள் வழங்கிய ஆணையின் படி, சர்வதேச சமூகத்துடன் பேசவேண்டிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தாமல், அரசாங்கத்துக்கான காலநீடிப்பை வழங்கி, அனைத்தையும் நீர்த்துப்போகச் செய்தவர்கள், தற்போது அதிக ஆசனங்களை மீண்டும் கேட்கின்றனர்” எனவும் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையிலேயே, தாம் புதிய கூட்டணியில் களமிறங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கான மக்கள் ஆதரவு தமக்குத் தேவையாக இருப்பதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .