2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை

செட்டிக்குளத்தில் பொலிஸார் மீது தாக்குதல் : 7 பேர் கைதாகினர்

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

. அகரன்

வவுனியா, செட்டிக்குளம் நகர்ப் பகுதியில் வைத்து, பொலிஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டில், 7 இளைஞர்களை, செட்டிக்குளம் பொலிஸார், நேற்று (15) மாலை கைதுசெய்துள்ளனர்.

செட்டிக்குளம் நகர்ப் பகுதியில், நேற்று  கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸாருக்கும் சில இளைஞர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, அவ்விருவருக்கிடையில் ஏறப்பட்ட வாய்த்தரக்கம் முற்றியதில், குறித்த இளைஞர்கள், பொலிஸாரைக் கீழே தள்ளிவிட்டு, அப்பகுதியில் நின்ற பஸ்ஸில் ஏறி, மெனிக்பாம் நோக்கித் தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் செட்டிக்குளம் பொலிஸ் நிலயத்துக்குத் தகவல் வழங்கியதையடுத்து, விரைந்த பொலிஸார், இளைஞர்கள் தப்பிச் சென்ற பஸ்ஸைத் துரத்திச் சென்று, மெனிக்பாம் பாலத்துக்கு அருகாமையில் வைத்து வழிமறித்துள்ளனர்.

இவ்வாறு வழிமறிக்கப்பட்ட பஸ்ஸை, பொலிஸ் நிலையத்தை நோக்கிச் செலுத்துமாறு, பொலிஸார் பணித்தனர்.

இதையடுத்து, குறித்த பஸ் பொலிஸ் நிலையத்தைச் சென்றடைந்ததன் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய 6 இளைஞர்களைக் கைது​செய்த பொலிஸார், பஸ்ஸை விடுவித்துள்ளனர்.

அத்துடன், தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, ஊர்ப் பகுதியில் வைத்து மேலுமொருவரை, பொலிஸார் கைதுசெய்தனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் கருத்துத் தெரிவிக்கையில், மதுபோதையில் நின்ற குறித்த இளைஞர்கள், வழக்கு விசாரணைக்காகச் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அவர்களது கடமையைச் செய்யவிடாமல், முரண்பட்டதுடன், அவர்களைத் தாக்கவும் முனைந்தனரெனவும், அதனாலேயே, அவ்விளைஞர்களைக் கைதுசெய்ததாகவும் தெரிவித்தனர்.

எனினும், பொலிஸார் முறையற்ற விதத்தில், சம்பந்தம் இல்லாதவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டமையாலேயே, குறித்த இளைஞர்கள் பொலிஸாருடன் முரண்பட்டனர் என, சம்பவத்தை நேரில் கண்டதாகத் தெரிவித்த சிலர் குறிப்பிட்டனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .