2025 ஜூன் 02, திங்கட்கிழமை

’ஜனாதிபதிச் செயலணியில் வடக்கு, கிழக்கு எம்.பிகள் பங்கேற்பது அர்த்தமற்றது’

Editorial   / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டத்தொடரில், அவ்விரு மாகாணங்களையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பது அர்த்தமற்றதென, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நேற்று முன்தினம் (23) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசந்திரன், மேற்படி செயலணியின் பார்வையாளர்களாகவும் வெறுமனே கருத்தைத் தெரிவிப்பவர்களாகவும் மாத்திரமே, வடக்கு, கிழக்கு எம்.பிக்கள் பங்கேற்க முடியுமென்றும் தவிர, அந்தச் செயலணியின் அங்கத்தவர்களாக மாற முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவே, அரசாங்கம் இது தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளதே தவிர, இதனால், தமிழ் மக்களின் அபிவிருத்தி தொடர்பாக எத்தகைய காத்திரமான முடிவுகளும், இந்தக் கூட்டங்கள் எடுக்கப்படப் போவதில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சுரேஷ் பிரேமசந்திரன், அரசியல் தீர்வை எட்டும்வரை, சில்லரை விடயங்களில் அக்கறை செலுத்தப்போவதில்லையென, இதுவரை கூறிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இப்பொழுது அபிவிருத்தி விடயத்தில் கவனம் செலுத்துவது ஏன் என்பதைப் பற்றியும் நாடாளுமன்றத்தினூடாகவும் தனக்கு உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பயன்படுத்தியும் ஆற்றமுடியாத கருமங்களை, ஏனோதானோ என்று அழைக்கப்பட்ட செயலணியின் கூட்டத்தில் கலந்துகொள்வதால் நிறைவேற்ற முடியுமா என்பதையும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென, வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X