2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பதிவு செய்ய வந்தவர்களில் 10 பேருக்கு தீர்வு: மெக்ஸ்வெல்

George   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான அமர்வில் 283 புதிய முறைப்பாட்டாளர்கள் பதிவு செய்ததுடன், அவர்களில் 10 முறைப்பாட்டாளர்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெகஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

அமர்வு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்துக்கூறுகையில், 'ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான சாட்சியமளிக்கும் அமர்வு, கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

25ஆம் திகதி திங்கட்கிழமை கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டவர்களும், 26 செவ்வாய்க்கிழமை மற்றும் 27ஆம் திகதி புதன்கிழமை ஆகிய இருநாட்களும் கண்டவாளை பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்;ந்தவர்களும், 28ஆம் திகதி வியாழக்கிழமை பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் சாட்சியமளித்தனர்.

மொத்தமாக 1,166 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டு, அவர்களில் 704 பேர் சாட்சியங்களை பதிவு செய்தனர். முகவரி மாறியதால், சாட்சியமளிக்க வருமாறு அனுப்பப்பட்ட கடிதம் கிடைக்காமல் சிலர் சாட்சியங்கள் அளிக்க வரவில்லையென்பதை அறியமுடிகின்றது.

இதனைவிட, 283 பேர் சாட்சியமளிக்கப் போவதாக பதிவுகளை மேற்கொண்டனர். பதிவுகளை மேற்கொள்ளும் போது, அவர்களின் பிரச்சினை கேட்கப்பட்டு 10 பேருக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டுள்ளது. மிகுதிப் பேரின் விவரங்கள் பதியப்பட்டுள்ளன.

சாட்சியங்களை வழங்கியவர்கள், இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினர் மீதும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டுக்களை முன்வைத்தனர்.
ஆணைக்குழுவின் காலம் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகின்றது. 

அதற்கு முன்பாக விசாரணை அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னர், மேற்கொண்டு நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொள்வார்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X