2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 மார்ச் 08 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைதீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக தொண்டு அடிப்படையில் பணியாற்றி நியமனம் கிடைக்கப்பெறாத சுகாதார தொண்டர்கள், இன்று காலை 10.30 மணியளவில் முல்லைதீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் முல்லைதீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனை சந்தித்து வட மாகாண முதலமைச்சர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட ஐவருக்கான மகஜர்களை கையளித்து, தமக்கான நீதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் வருமாறு,

முல்லைதீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக பணியாற்றிவரும் அரசாங்கத்தால் தவறவிடப்பட்ட ஏனைய சுகாதார தொண்டர்கள் அனைவருக்கும் ஒரே தடவையில் நிரந்தர நியமனம் வழங்க வழி செய்யுங்கள்.

முல்லைதீவு மாவட்டத்தில் சுகாதார தொண்டர்களாக யுத்த இடப்பெயர்வுக்கு முன்னரிலிருந்து இன்று வரை முல்லைதீவு சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவின் கீழ் இன்று வரை பணிபுரிந்து வருகிறோம்.

நாம் சுகாதார தொண்டர்களாக சுனாமி அனர்த்த காலத்திலும் யுத்தத்துக்கு பின்னரும் வவுனியா நலன்புரி நிலையங்களிலும் அதன் பின்னர் மீள்குடியேற்றத்தின் பின்னர் இன்று வரை தொடர்ச்சியாக மிக வறுமையிலும் போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியிலும் எந்தவித கொடுப்பனவுமின்றி நிரந்தர நியமனம் வரும் என்ற நம்பிக்கையில் இந்த சுகாதார தொண்டர் சேவையாற்றி வருகிறோம். எம்மோடு பணிசெய்த ஒரு தொகுதி தொண்டர்களுக்கு 08.06.2013 அன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. இன்னுமொரு தொகுதியினருக்கு 23.03.2015 அன்று நியமனம் வழங்கப்பட்டது.

இந்த தொண்டர்களோடு நம்மை ஒப்பிடும்போது 75ற்கும் மேற்பட்டவர்களே தவறவிடப்பட்ட ஏனைய சுகாதார தொண்டர்கள் இவர்கள் விடயத்தில் எந்தவித வேறுபாடுகளோ தகைமை பிரச்சினைகளோ தொடர்சேவைப்பிரச்சினை எதுவுமே இல்லை.

கடந்த காலத்தில் மஹிந்த அரசாங்கத்தில் திட்டமிட்ட அரசியல் பழி வாங்கல் செய்யப்பட்டு எமக்கு பொருளாதார வாழ்வு ரீதியாகவும்  உளவியல் ரீதியாகவும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் முல்லைதீவு மாவட்டமே யுத்தத்திலும் இயற்கை அனர்த்தத்திலும் முழுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டமாகும்.

வறிய மக்கள் பொருளாதாரத்தில் கல்வி அடிப்படைத் தேவைகள் அனைத்திலும் மிக மிக பின்தங்கிய மாவட்டங்களில் முல்லைதீவு மாவட்டமே முதன்மையானது என தாங்கள் அறிந்ததே.

எனவே, முல்லைத்தீவு மாவட்டத்தில் நீங்கள் கவனமெடுத்து 05 வருடத்திலிருந்து 15 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்துவரும் சகாதார தொண்டர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து 03ஆம் கட்டமாக அனைவருக்கும் எவ்வித தாமதமுமின்றி தீர்வை பெற்றுத் தருமாறு கோருகின்றோம் என அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X